மத்திய அரசின் அழுத்தத்தால்... இந்திய பிரபலங்கள் ட்வீட்? விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவு
மும்பை: மத்திய அரசின் அழுத்தத்தாலேயே விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது குறித்த விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில், குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின் பதற்றம் அதிகரித்துள்ளது.
அதிகளவில் போலீஸ் குவிப்பு, தடுப்புகள் அமைப்பது போல பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாப் பாடகி ரிஹான்னா, மியா கஃலிபா, கிரேட்ட தன்பெர்க் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் ட்வீட்
விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளிநாட்டுப் பிரபலங்கள் ஆதரவு அளித்திருந்த நிலையில், சச்சின, கோலி, ரஹானே, லதா மங்கேஷ்வர், அக்ஷய்குமார் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள், அந்நியர்கள் யாரும் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட தேவையில்லை என்று ட்வீட் செய்திருந்தனர். மேலும், இது தொடர்பாக அக்ஷய்குமாரும் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் ஒரே ட்வீட்டை பதிவிட்டதும் சர்ச்சை ஆனது.

விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியப் பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாகக் காங்கிரஸ் சார்பில் மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக்த்தை சந்தித்து புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த மகாராஷ்டிர போலீசாருக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் சந்தேகம்
இது குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், "பாஜக நமது நாட்டின் ஹீரோக்களுக்கு அழுத்தம் தருகிறது. அவர்களுக்கு நாம் பாதுகாப்பை வழங்க வேண்டும். இது குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிஹான்னா ட்வீட்டுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்த பின்ரே பல இந்திய பிரபலங்களும் ட்வீட் செய்திருந்தனர்.

காரணங்கள் உள்ளன
இது அவர்களின் சொந்த கருத்தாக இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், இதற்குப் பின் பாஜக இருக்கக்கூடும் என்ற சந்தேகிக்க சில காரணங்கள் உள்ளன. அனைவரது ட்வீட்களிலும் சில குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டும் திரும்ப திரும்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைவரது ட்வீட்களுக்கு பின்னாலும் ஒரு குறிப்பிட்ட பேட்டர்ன் இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.

வெளியுறவு துறை அமைச்சகம் ட்வீட்
முன்னதாக, ஒரு பிரச்சனை குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிருப்பது பொறுப்பற்ற செயல் என்று தெரிவித்திருந்த வெளியுறவு துறை அமைச்சகம் #IndiaTogether மற்றும் #IndiaAgainstPropaganda ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி ட்வீட் செய்திருந்தது. இதன் பின்னர் பல இந்தியப் பிரபலங்கள் இதே ஹேஷ்டேக்குகளை கொண்டு ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications