மகாராஷ்டிரா அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் மராத்தியில்தான் பேசனும்.. பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில்தான் கட்டாயம் பேச வேண்டும் என்று அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அரசு கழகங்கள் உள்ளிட்டவைகளிலும் மராத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் போல மகாராஷ்டிராவிலும் மொழி உணர்வு கொழுந்துவிட்டு எரியக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் அரசு அலுவலகங்கள், அரசு கழகங்கள் உள்ளிட்டவைகளில் தற்போது மராத்தி மொழியில்தான் அனைத்து ஊழியர்களும் பேச வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர் தவிர மகாராஷ்டிரா மாநில மக்களிடம் மராத்திய மொழியில்தான் மாநிலத்தின் அரசு ஊழியர்கள் உரையாட வேண்டும் என்பதும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் உத்தரவாகும்.

மேலும் மகாராஷ்டிரா மாநில அரசு அலுவலக கணினிகள் அனைத்திலும் மராத்திய மொழி தட்டச்சு மென்பொருட்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் அம்மாநி அரசின் புதிய உத்தரவுகளில் ஒன்று. மகாராஷ்டிரா மாநில அரசின் மராத்தி மொழி கொள்கை குழுவின் பரிந்துரைப்படி இந்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளா.
அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில் பேசாத ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்; இந்த புகார்கள் மீதான உண்மைத்தன்மை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மராத்தி மொழி பாதுகாப்பு, மேம்பாட்டுக்காக இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
தமிழகத்தில் தமிழ் கட்டாயம்
தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் பெரும்பாலான வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மற்றும் 'தமிழிலும்' இடம் பெற்றிருக்கின்றன. இதனை மாற்றி தமிழில்தான் பிரதானமாக வைக்க வேண்டும் என்கிற அரசு உத்தரவு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது என்பது தமிழார்வலர்களின் கவலை.












Click it and Unblock the Notifications