சிவசேனாவின் பதவி ஆசை.. முரண்டு.. பிடிவாதத்திற்கு.. ஸ்கெட்ச் போட்டு வேட்டு வைத்த பாஜக!
சிவசேனாவின் பதவி ஆசைக்கு பாஜக வேட்டு வைத்துள்ளது
Recommended Video
மும்பை: சிவசேனாவின் பதவி ஆசை, பிடிவாதம், முரண்டு என எல்லாவற்றையுமே பக்காவாக பிளான் போட்டு காலி செய்துள்ளது பாஜக... இதை யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டனர். எனவே இவர்கள்தான் அடுத்த ஆட்சி என்று பொதுவான கருத்து நிலவியது.
அதுபோலவே பாஜக தனிப் பெரும் கட்சியாக வந்தது. 2வது இடத்தை சிவசேனா பிடித்தது. இதையடுத்து மீண்டும் பட்னவீஸ் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பட்னவீஸ் பதவியேற்பு.. ரகசியம் காத்த மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை.. நடந்தது என்ன.. விறு விறு தகவல்கள்
ஆனால் சிவசேனா திடீரென பல்டி அடித்தது. நாங்கள்தான் முதல்வராக இருப்போம். எங்களுக்கே முதல்வர் பதவி என்று நிபந்தனை போட்டது. அதோடு நில்லாமல் ஆளுக்கு பாதி வருடங்கள் முதல்வர் பதவியை வகிக்க வேண்டும் என்றும் கட்டையை போட்டது. இதை பாஜக எதிர்பார்க்கவில்லை.
சிவசேனாவின் நிபந்தனைகளுக்கு சிலவற்றை ஏற்க பாஜக முன்வந்தாலும் கூட பெரும்பாலானவற்றை ஏற்கவில்லை. குறிப்பாக 50-50 என்ற வாதத்தை ஏற்கவே இல்லை. பலமுறை பேசிப் பார்த்தும் சிவசேனா இறங்கி வரவே இல்லை.
பாஜக நினைத்திருந்தால் சிவசேனாவை உடைத்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது. ஆனாலும் பாஜக பொறுமை காத்தது. நிறையவே பேசியும் பார்த்தது. ஆனால் சிவசேனா தனது பிடிவாதத்தை தளர்த்தவே இல்லை.
இதை விட முக்கியமாக காங்கிரஸுடனும், தேசியவாத காங்கிரஸுடனும் அது பேச ஆரம்பித்தது. குறிப்பாக சரத் பவாருடன் சஞ்சய் ராவத் பேசியது பாஜகவை அதிர வைத்தது... கடுப்பானது பாஜக... இதனால் அது சிவசேனாவை கை கழுவியது... ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று ஆளுநரிடமும் கூறி விட்டது.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்தது. இடையில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது. இப்படி இழுபறியாகி போய்க் கொண்டிருந்த நிலையில்தான் ரகசியமாக காய் நகர்த்தியுள்ளது பாஜக. நம்பிக்கை துரோகம் செய்த தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள அஜீத் பவாரை தன் பக்கம் இழுத்தது. கூடவே அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரின் ஆதரவையும் பெற்று இப்போது ஆட்சியமைத்து விட்டது.
பாஜகவின் இந்த ரகசிய அதிரடியை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஆட்சியமைத்துள்ளது. இந்த அதிரடி மூலம் சிவசேனாவையும் அது மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தியுள்ளது. சிவசேனா ஆரம்பத்திலேயே பாஜகவுடன் இணக்கமாக போயிருந்தால் இன்று அஜீத் பவார் இருந்த இடத்தில் உத்தவ் தாக்கரேவோ அல்லது அவரது மகன் ஆதித்யா தாக்கரேவோ இருந்திருக்கலாம். ஆனால் அதை அக்கட்சி கோட்டை விட்டுள்ளது.