இந்த மனசு தான் கடவுளா? திருமணம் முடிந்த 20 நாளில் மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்!
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது திருமணமான 20 நாளில் மனைவியை அவரது காதலனுடன் கணவர் ஒருவர் சேர்த்து வைத்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
திருமணம்.. ஆண், பெண் என இருமணங்கள் இணைந்து இல்லறத்தை நோக்கி எடுத்து வைக்கும் உன்னதமான விழா. திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இடையே விட்டுகொடுக்கும் மனப்பான்மை என்பது கண்டிப்பாக அவசியம்.

ஆனால் மகாராஷ்டிராவில் கணவர் ஒருவர் தனது மனைவியையே இன்னொருவருக்காக விட்டு கொடுத்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? ஏன் நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
மகாராஷ்டிரா மாநிலம் மானட்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பீச்கிலா கிராமத்தை சேர்ந்தவர் சனோஜ் குமார் சிங். இவருக்கு பிரியங்கா குமாரி என்பவருக்கும் கடந்த மாதம் 10ம் தேதி திருமணம் நடந்தது. இருவரின் குடும்பத்தினர் திருமணத்தை பேசி முடித்து வைத்தனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு பிரியங்கா சோகமாக இருந்து வந்துள்ளார்.
இல்லற வாழ்க்கையில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அதோடு சனோஜ் குமார் சிங்கிடமும் அவர் சரியாக பேசவில்லை. இதற்கான காரணத்தை சனோஜ் குமார் கேட்டபோதும் பிரியங்கா குமாரி கூறவில்லை. இதற்கிடையே தான் திருமணம் முடிந்து வேறு வீட்டுக்கு வந்துள்ளதால் பிரியங்கா குமாரி இப்படி இருக்கிறார். நாளைடைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் என சனோஜ் குமார் சிங் நினைத்தார்.
இந்நிலையில் தான் திருமணமான 20 நாளில் பிரியங்கா குமாரி ஆண் ஒருவருடன் வீட்டில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார். இதனை பார்த்த கிராமத்தினர் இருவரையும் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களை மானட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிரியங்கா குமாரி மற்றும் அவருடன் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரைணயின் அந்த நபரின் பெயர் ஜிதேந்திரா என்பது தெரியவந்தது.
மேலும், சனோஜ் குமார் சிங்கை திருமணம் செய்த பிரியங்கா அதற்கு முன்பு ஜிதேந்திராவை 10 ஆண்டுகளாக காதலித்ததும் தெரியவந்தது. அதோடு இருவரும் வேறுவேறு சாதி என்பதால் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும், அதன்பிறகு ஜிதேந்திராவை புறக்கணித்துவிட்டு குடும்பத்தினர் சனோஜ் குமார் சிங்குடன் திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது.
மேலும் காதலனை விட்டுவிட்டு சனோஜ் குமார் சிங்குடன் வாழ பிடிக்காத நிலையில் இருவரும் ஓடிப்போக முடிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து சனோஜ் குமார் சிங்கின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்துக்கு வந்த சனோஜ், அவர்களின் காதலுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் பிரியங்கா குமாரி தனது காதலன் ஜிதேந்திராவுடன் செல்ல ஆட்சேபனை இல்லை என கூறினார். திருமணம் முடிந்த 020 நாளில் மனைவியை, அவரது காதலனுடன் கணவர் சேர்த்து வைத்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications