அன்று ஆபாச படம்.. இன்று மகாராஷ்டிர சட்டசபையில் ஆன்லைன் ரம்மி! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பாஜக அரசு
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாணிக்ராவ் கொக்கடே சட்டசபையில் ரம்மி விளையாடியது சர்ச்சையானது. முதலில் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இப்போது மாணிக்ராவ் கொக்கடே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சராக இருந்த மாணிக்ராவ் கொக்கடே அந்த துறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் அப்போதைய பாஜக அமைச்சர்கள் இருவர் ஆபாசப் படம் பார்த்து சர்ச்சையானது. இது இப்போது நாடு முழுக்க மிகப் பெரிய விஷயமாக வெடித்தது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவர் அவையில் ரம்மி ஆடிக் கொண்டு இருந்தது சர்ச்சையாகி இருக்கிறது.

மாணிக்ராவ் கொக்கடே
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கும் வகிக்கும் என்சிபி எம்.எல்.ஏ மாணிக்ராவ் கொக்கடே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜக- சிவசேனா- என்சிபி கூட்டணி அரசில் அவர் வேளாண் துறை அமைச்சராக இருந்த நிலையில், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் தீவிர ஆதரவாளரான மாணிக்ராவ் கொக்கடே, சட்டசபையின் மழைக்கால கூட்டத்தின் போது தனது தொலைப்பேசியில் ஆன்லைன் ரம்மி விளையாடியது இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆனது. சரத் பவார் என்சிபி தரப்பு எம்எல்ஏ ரோஹித் பவார் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்தார். மக்கள் பிரச்சினை குறித்துப் பேச வேண்டிய இடத்தில் மாணிக்ராவ் ரம்மி விளையாடிக் கொண்டிருப்பதாக அவர் சாடினார்
அமைச்சரவை மாற்றம்
இதையடுத்து மாணிக்ராவ் கொக்கடே மீது அரசு எடுத்த நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் இது குறித்து ஆலோசனை நடத்திய பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாணிக்கராவ் கொக்கடே அமைச்சரவையில் இருந்து முழுமையாக நீக்கப்படவில்லை. விவசாய துறையில் இருந்து நீக்கப்பட்டாலும் அவருக்கு விளையாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் தத்தாரேய பரனே புதிய வேளாண் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மாணிக்ராவ் கொக்கடே திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது செல்போனில் திடீரென நோட்டிபிக்கேஷன் வந்ததாகச் சொல்லும் மாணிக்ராவ் கொக்கடே, அதை ஆஃப் செய்யவே முயன்றதாகவும் சட்டசபையில் ஆன்லைன் ரம்மி விளையாடவில்லை என்றும் கூறினார். இருப்பினும், அங்குள்ள எதிர்க்கட்சிகள் இதை ஏற்பதாக இல்லை. ஒரு நோட்டிபிக்கேஷனை ஆஃப் செய்ய இவ்வளவு நேரம் எல்லாம் ஆகாது என்று சாடினர்.
பட்னாவிஸ் திட்டவட்டம்
இந்த வீடியோ வெளியாகி சில நாட்கள் ஆகும் நிலையில், இப்போது தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் மாணிக்ராவ் மீது எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. ஆனால், மாணிக்ராவ் மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், அரசின் இமேஜ் டேமேஜ் ஆகக்கூடாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கருதினார்.
மேலும், அஜித் பவாரும் கூட செவ்வாய்க்கிழமையே மாணிக்ராவ் கொக்கடேவை நேரில் சந்தித்து, எச்சரித்தார். சர்ச்சை கருத்துகளையும் கூறுவதை நிறுத்துமாறு வலியுறுத்தினார். இருப்பினும், அப்போதும் மாணிக்ராவ் கொக்கடே உடனடியாக நீக்கப்படவில்லை. முதலமைச்சர் பட்னாவிஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க அஜித் பவாருக்கு பரிந்துரைத்த பிறகே மாணிக்ராவ் வேளாண் துறையில் இருந்து நீக்கப்பட்டார்.
சர்ச்சையில் சிக்குவது முதல்முறை இல்லை
கடந்த 8 மாதங்களாக மாணிக்ராவ் கொக்கடே வேளாண் துறை அமைச்சராக இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் மாணிக்ராவ் கொக்கடே சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை இல்லை. விவசாயிகளைப் பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையானது. அதேபோல பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை வேளாண் உட்படப் பிற துறைகளின் திட்டங்களைப் பாதிப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications