மகாராஷ்டிரா:முதல்வர் பதவிக்காக மோதல்-சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் நள்ளிரவில் ஜனாதிபதி ஆட்சி அமல்?
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு இன்று பதவியேற்றாக வேண்டிய நெருக்கடிஏற்பட்டுள்ளது. ஆனால் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியோ புதிய ஆட்சி அமைப்பது இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் இன்று நள்ளிரவில் தற்காலிகமாக ஜனாதிபதி ஆட்சிஅமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில 230 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியது. இதனால் மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

ஆனால் மகாராஷ்டிராவில் புதிய முதல்வர் யார் என்பதில் பாஜக கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. மகாராஷ்டிரா முதல்வர் பதவியை சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தமக்கே மீண்டும் வழங்க வேண்டும் என்கிறார். பீகாரில் குறைவான இடங்களைப் பெற்ற கூட்டணி கட்சித் தலைவரான நிதிஷ்குமாருக்குதானே முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தீர்கள்.. அதேபோல எனக்கும் முதல்வர் பதவியை பாஜக விட்டுத் தர வேண்டும் என்பது ஏக்நாத் ஷிண்டேவின் கலகக் குரல்.
ஆனால் மற்றொரு கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரோ, பாஜகவுக்குதான் முதல்வர் பதவி என ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த குழப்பங்களால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இதனையடுத்து மகாரஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து மகாராஷ்டிரா முதல்வர் பதவி குறித்து விவாதிக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்.
இதனிடையே மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்றைக்குள் புதிய அரசு பதவியேற்றாக வேண்டும். அப்படி புதிய அரசு பதவியேற்காமல் இழுபறி நீடித்து வந்தால், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது தொடர்பாக மாறுபட்ட கருத்துகளும் முன்வைக்கப்படுவதால் மகாராஷ்டிராவில் தொடர்ந்து பரபரப்பு நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications