மீண்டும் முழு லாக்டவுன்? மகாராஷ்டிராவில் புதிய உச்சம்.. புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த உத்தவ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்கு பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே கொரோனா பரவல் மோசமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 41,434 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல மொத்தம் 13 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா
குறிப்பாக மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமாகி வருகிறது. சனிக்கிழமை மட்டும் அங்கு 20,318 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல மும்பையில் மட்டும் ஒரே நாளில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தினசரி ஆக்சிஜன் தேவை 800 மெட்ரிக் டன்களை தாண்டும்போது அல்லது கொரோனா படுக்கைகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பினால் ஊரடங்கு குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத் துறை கூறியிருந்தது.

முதல்வர் வேண்டுகோள்
இந்நிலையில், தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக அங்கு சில கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் மீண்டும் ஒரு கொரோனா அலையுடன் போராடும் சூழலில் உள்ளோம். இந்த புதிய உருமாறிய கொரோனா ஆபத்தானதா இல்லையா என்பது பற்றி விவாதிக்காமல், பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வேக்சின் போட்டுக் கொண்டு & வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். இது தான் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மிகச் சிறந்த வழி" என்று பதிவிட்டுள்ளார்.

கூடுதல் கட்டுப்பாடுகள்
அங்கு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேக்சின் போடப்பட்டவர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வளாகங்கள், சந்தை வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். அவை இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு தடை
திரையரங்குகளுக்கும் இந்த 50% கட்டுப்பாடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் இரவு மற்றும் காலை காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. சலூன்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய நிலையங்களை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகள்
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோர் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் சமூக, மத, கலாசார அல்லது அரசியல் கூட்டங்களில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும் இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையில் அனைத்து விதமான ஒன்றுகூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications