மகாராஷ்டிரா அடுக்குமாடி கட்டட விபத்து.. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு.. 4 வயது சிறுவன் மீட்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
மும்பை அருகே ராய்காட் மாவட்டத்தில் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் எனும் 5 மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டடத்தின் மேல் 3 மாடிகள் திடீரென இடிந்து விழத் தொடங்கியது.

சில நிமிடங்களில் கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அந்த பகுதி மக்களுடன் இணைந்து கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
பின்னர் மும்பையில் இருந்து விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன இயந்திரங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தனர். 14 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் 4 வயது சிறுவன் ஒருவனை மீட்பு படையினர் சிறு காயங்களுடன் மீட்டனர். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக இறந்தவர்களில் 3 ஆண்கள், 2 பெண்களின் உடல்கள் இருந்தன. இன்னும் பலர் பலியாகியிருக்கக் கூடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications