காதலனின் சடலத்தை திருமணம் செய்த இளம்பெண்.. மகாராஷ்டிராவை அதிரவைத்த ஆணவக் கொலை
மும்பை: டிஜிட்டல் மயமான இந்த காலத்திலும் நம் நாட்டில் சாதி, மதம் பிரச்சனை மிகவும் தீவிரமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களிலும் சாதிய தீண்டாமை, ஆணவ கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் சாதி மாறி காதலித்ததால் பெண்ணின் அண்ணன் மற்றும் அப்பா அவரின் காதலை ஆணவ கொலை செய்துள்ளனர். தன் காதலனின் சடலத்துடன் திருமணம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆன்சல் மமித்வார் என்கிற 21 வயது பெண், சக்சம் டேட் என்கிற ஆணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய திட்டமிருந்தனர். மமித்துக்கு, சக்சம் தன் சகோதரர் மூலமாக தான் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமுதாயம் என்பதால் இதற்கு மமித்தின் குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காதலன் ஆணவ கொலை
அவரின் அப்பா மற்றும் சகோதரர் சக்சமை திருமணம் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் மமித்வார் தன் காதல் விவகாரத்தில் உறுதியாக இருந்து சக்சம் டேட்டை தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். சொன்னபடி இருவரும் திருமணம் செய்வதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் பெண்ணின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்துள்ளனர்.
சடலத்துடன் திருமணம்
ஆன்சலின் அண்ணன் ஹிமேஸ் சக்சமை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் கற்களால் சக்சமின் தலைப் பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சக்சம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் ஹிமேஸ், ஆன்சலின் மற்றொரு சகோதரர் சாஹில் மற்றும் தந்தை கஜணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த ஆணவ கொலையால் ஆன்சல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சக்சம் டேட் - ஹிமேஸ் ஆகிய 2 பேரும் முன்பு நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இரண்டு பேரும் ஏராளமான வழக்குகள் உள்ள சரித்திரி பதிவேடு குற்றவாளிகள் ஆவர். சக்சம் டேட்டிற்கு இறுதி சடங்குகளின்போது ஆன்சல் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. சக்சமின் உடல் முழுவதும் மஞ்சள் பூசிய அவர், பிறகு சக்சமின் கையில் குங்குமத்தை எடுக்க வைத்து அதை நெற்றியில் வைத்துள்ளார்.
காதல் வென்றது
இதன் மூலம் தங்களுக்கு அதிகாரபூர்வமாக திருமணம் நடைபெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆன்சல் மமித்வார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மரணத்தின்போது கூட எங்கள் காதல் வென்றுவிட்டது. என் அப்பாவும், அண்ணனும் தோற்றுவிட்டார்கள். எங்கள் காதல் இப்போதும் உயிருடன் தான் இருக்கிறது. என் வாழ்வின் மீதி நாட்களை சக்சமின் மனைவியாக, அவர்கள் குடும்பத்தின் மருமகளாக வாழ நினைக்கிறேன்.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட என் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்." என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 6 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications