கொரோனாவுக்கு தாய் பலி.. காணாமல் போன பாட்டி.. கழிப்பறையில் பிணமாகக் கிடந்த பரிதாபம்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் கொரோனாவால் தாயை இழந்த இளைஞரின் காணாமல் போன பாட்டி ஜல்கான் மருத்துவமனையின் கழிப்பறையில் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
புனேவை சேர்ந்த ஹர்ஷல் மார்க்கெட்டிங் எக்ஸிகூட்டிவாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாவார். இவரது குடும்பத்தில் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது.
இவரது தந்தை துளசிராமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நாசிக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருகிறது.
உலக நாடுகளில் பகீர்.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு திடீரென கிடுகிடு உயர்வு- இந்தியா 3-வது இடம்
கழிவறை
இந்த நிலையில் ஹர்ஷலின் தாய் டிலா நெஹதே மற்றும் பாட்டி மாலதி நெஹதேவுக்கும் (82) கொரோனா தொற்று கடந்த மே 23-ஆம் தேதி உறுதியானவுடன் அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் ரயில்வே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் ரயில்வே மருத்துவமனையில் பெட் பேன் இல்லாததால் டிலா நெஹதே கழிவறைக்கு செல்வதாக கூறியுள்ளார்.
ஊழியர்கள்
அங்கு அவர் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் யாரும் உதவி செய்யவில்லை. மற்றொரு நோயாளி கழிப்பறைக்கு சென்ற போது இவர் விழுந்து கிடப்பதை பார்த்து அவரை தூக்கிவிட்டு மீண்டும் படுக்கைக்கு கொண்டு சென்றார். கடந்த ஜனவரி மாதம் டிலாவின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவர் ஜல்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தனிமை வார்டு
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை காலி இல்லாததால் அவர் காத்திருப்பு அறையில் 6 மணி நேரம் காத்திருந்து இறந்துவிட்டார். இந்த நிலையில் ஜூன் 1-ஆம் தேதி மாலதியின் உடல்நிலையும் மோசமாகிவிட்டது. இதையடுத்து அவரும் ஜல்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை கொரோனா வார்டில் அனுமதிக்காமல் கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் தனிமை வார்டில் அனுமதித்துள்ளனர்.
புகார்
ஜூன் 2ஆம் தேதி மாலை தனது பாட்டி மாலதியை காணாமல் திடுக்கிட்ட ஹர்ஷல், வார்டு பாயிடம் விவரத்தை கூறியுள்ளார். ஜூன் 4-ஆம் தேதி மருத்துவமனை மருத்துவர் பிரசாத், ஹர்ஷலின் குடும்பத்தினரிடம் சென்று மாலதியை கண்டுபிடித்துவிட்டோம். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். இதை அறியாத ஹர்ஷலின் உறவினர் மாலதியின் புகைப்படத்தை நர்ஸுகளிடம் காண்பித்து இவரை பார்த்தீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அவர்களோ இவர் ஜூன் 2ஆம் தேதி முதல் காணவில்லை என கூறியுள்ளனர். உடனே மாலதியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.
ஜல்கான் மருத்துவமனை
ஜல்கான் மருத்துவமனைக்கு வந்த போலீஸார் மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தனது தாய் கழிப்பறையில் விழுந்தது போல் பாட்டியும் விழுந்திருக்கலாம் எனவே கழிப்பறையில் தேடி பாருங்கள் என மருத்துவர்கள், நர்ஸுகளிடம் ஹர்ஷல் கூறியும் யாரும் தேடவில்லை. இப்படியே 8 நாட்கள் ஓடிவிட்டது.
அழுகிய சடலம்
இந்த நிலையில் கழிப்பறையில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக மற்ற கழிப்பறைகளை பயன்படுத்தும் நோயாளிகள் புகார் அளித்ததை அடுத்து உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த ஒரு கழிப்பறையின் கதவுகளை உடைத்து திறந்து பார்த்தால் மாலதி நெஹதேவின் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
உத்தரவு
இதுதொடர்பான விசாரணையில் மாலதி இறப்புக்கு முன்னர் கொரோனா நோயாளிகள் 3 நோயாளிகள் கழிப்பறை செல்வதாக கூறி அங்கேயே சரிந்து விழுந்து இறந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையை சேர்ந்த 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாட்டியும் இறப்பு
தாயை இழந்த ஹர்ஷல் தற்போது பாட்டியும் இறந்துவிட்டதால் அந்த குடும்பமே கடும் சோகத்தில் உள்ளது. இருவரது இறப்பிலும் உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவில் ஜல்கான் மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.