ஆர்யான் கானுக்கு ஜாமீன் மறுப்பு.. அக்.7 வரை போதை பொருள் தடுப்பு காவலுக்கு அனுமதி
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை நகர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் அக்டோபர் 7ஆம் தேதி வரை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரின் காவலில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடலோரத்தில் இருந்த ஒரு சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதைப் பொருள் விருந்து நடப்பதாக போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அங்கிருந்த 8 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் ஒருவர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானும் ஆவார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். இவருடன் சேர்த்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 8 பேரில் 2 பெண்கள் ஆவர். டெல்லி தொழிலதிபர்களின் மகள்கள் என சொல்லப்படுகிறது.

மருத்துவ பரிசோதனை
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மும்பை நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது போதை பொருள் தடுப்பு பிரிவினர் சார்பில் ஏஎஸ்ஜி அனில் சிங் ஆஜராகினார். அவர் ஆர்யான் கான், அர்பாஸ் சேத் மெர்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் சட்டப்பிரிவு 20, 27, 35, 8சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்யானின் போனில் அதிர்ச்சியூட்டும் ஒரு பொருள் இருக்கிறது.

அக்டோபர் 11
எனவே அவர்கள் மூவரையும் அக்டோபர் 11 ஆம் தேதி வரை அதாவது 9 நாட்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் காவலில் அடைக்க அனுமதி கேட்டார். இந்த நிலையில் ஆர்யான் கான் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் மணிஷிந்தே, ஆர்யானுக்கு ஜாமீன் கோரினார். அப்போது சதீஷ் தன் வாதத்தில், "எனது கட்சிக்காரர் ஆர்யானிடம் இருந்து எந்த வித போதை பொருளையும் போலீஸார் கைப்பற்றவில்லை. மற்ற குற்றவாளிகளிடம் போதை பொருளை கைப்பற்றிவிட்டு ஆர்யானையும் காவலில் வைத்து விசாரிப்பது அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

குற்றவாளி
அப்போது குறுக்கிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) அனில் சிங், அழைப்பின் பேரில்தான் ஆர்யான் கான் கப்பலுக்கு சென்றுள்ளார். போதை பொருள் வைத்திருந்த குற்றவாளிகளுடன் ஆர்யானும் இருந்துள்ளார். எனவே விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.

நீதிபதி ஆர்யான்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்யானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவரை வரும் 7ஆம் தேதி வரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அது போல் ஆர்யானுடன் கைது செய்யப்பட்ட அர்பாஸ் சேத் மெர்சன்ட், முன்முன் ஆகிய இருவரும் என்சிபி கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications