ED- க்கு விழுந்த குட்டு.. 180 கோடி மதிப்பு வீட்டை திரும்ப பெறும் பிரபுல் படேல்.. நீதிமன்றம் அதிரடி
மும்பை: அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்பியுமான பிரபுல் படேலுக்கு சொந்தமான ரூ180 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை உத்தரவை சட்ட விரோதம் எனக் கூறி தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபுல் படேல். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த பிரபுல் படேல் தற்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ளார். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

மும்பை கோர்ட்: பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு வாஷிங்க் மெஷின் போல ஊழல் கறைபடிந்தவர்கள் எல்லாம் தூய்மையானவர்கள் ஆகிவிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கின்ன. இந்த நிலையில்தான், பிரபுல் படேலின் 180 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது சட்ட விரோதம் என்று மும்பை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் சட்டம் SAFEMA வழக்குளை கையாளும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரபுல் படேலுக்கு பெரும் நிம்மதியை இந்த உத்தரவு கொடுத்துள்ளது. மும்பையின் ஒர்லி பகுதியில் உள்ள சீஜெ ஹவுஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12 மற்றும் 15-வது தளங்களை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது.
ரூ.180 கோடி: இதன் மதிப்பு ரூ. 180 கோடியாகும். பிரபுல் படேலின் மனைவி வர்ஷா மற்றும் அவரது மில்லினியம் டெவலப்பர் நிறுவனத்தின் பெயரில் இந்த சொத்துக்கள் வாங்க்கப்பட்டு இருந்தது. போதை பொருள் மாஃபியாவும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியுமாக இருந்த ஹஜ்ரா மேமனின் முதல் மனைவியான இக்பால் மிர்ச்சியிடம் இருந்து இந்த சொத்துக்கள் சட்ட விரோதமாக வாங்க்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
ஹஜ்ரா மேமன்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஹஜ்ரா மேமன் கடந்த 2013 ஆம் ஆண்டு லண்டனில் உயிரிழந்தார். அமலாக்கத்துறை முடக்கிய உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்ட தீர்ப்பாயம், பிராபுல் படேலுக்கு வாங்கிய இந்த சொத்துக்கள் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் வாங்கப்பட்டது இல்லை என்றும் மிர்ச்சிக்கும் இந்த சொத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் உத்தரவிட்டது.
குற்றவாளி என்பதால்: மேமனுக்கு சொந்தமான 1,400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியாக முடக்கப்பட்டுள்ளதால், குற்றத்துடன் தொடர்பு இல்லாத சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மேமனுக்கு சொந்தமான சீஜெய் ஹவுஸ் கட்டுமான நிறுவனத்தில் இருந்து பிராபுல் படேல் பிளாட்களை வாங்கியுள்ளதாகவும் மேமன் மற்றும் அவரது இரு மகங்களும் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தது.
பாஜகவின் கிளை அமைப்புகள்: தற்போது பிரபுல் படேலுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில் சிவசேனா (உத்தவ்) கட்சியை சஞ்சய் ராவத் கடுமையாக சாடியுள்ளார். அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக ஆகியிருப்பதாகவும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள் பாஜகவின் கிளை அமைப்புகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications