ஒரு குழந்தைக்கு உரிமை கேட்ட பெற்ற தாய், வளர்ப்பு தாய்.. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன தெரியுமா?
தத்து குழந்தை விவகாரத்தில் மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
மும்பை : குழந்தையை வளர்க்கும் உரிமை, குழந்தையைப் பெற்ற தாய்க்கே உள்ளது எனத் தெரிவித்து, தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தையை தாயிடமே ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமணத்திற்கு முன்பே இளம்பெண் கர்ப்பமான நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தையை தத்துக் கொடுத்துள்ளனர்.
பின்னர், காதலன் உடனே அப்பெண்ணுக்கு திருமணம் நடந்த நிலையில், தங்கள் குழந்தையை திரும்பக் கேட்டதற்கு தத்தெடுத்த பெற்றோர், குழந்தையை திருப்பித் தர மறுத்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே குழந்தை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்தார். அவர்கள் திருமணத்திற்கு முன்பே நெருக்கமாக இருந்த நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்தார். இதுபற்றி காதலனிடம் கூற, அவர் உடனடியாக திருமணம் செய்துகொள்ள மறுத்தார். இதற்கிடையே நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால் அதனை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல் கவலையுற்றுள்ளார் அந்த இளம்பெண்.

தத்தெடுத்த தம்பதி
அப்போது இளம்பெண்ணைப் பார்க்க வந்த சிலர், உன்னால் தனியாக குழந்தையை வளர்ப்பது கடினம், எனவே குழந்தையை தத்து கொடுத்துவிடு எனக் கூறியுள்ளனர். அப்போது இருந்த குழப்பமான மனநிலையில் அந்த இளம்பெண்ணும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவரிடம் பேசிய இடைத்தரகர்கள், குழந்தையை தத்து எடுப்பவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்றும், அவர்கள் குழந்தையை நன்றாக வளர்ப்பார்கள் எனவும் கூறினர். இதையடுத்து அவர்களிடம் தனது குழந்தையை தத்துக் கொடுத்துள்ளார்.

கொடுக்க மறுத்த தம்பதி
சில நாட்களில் அந்த இளம்பெண், அவரது காதலனையே திருமணம் செய்து கொண்டார். எனவே தத்துக் கொடுத்த குழந்தையை மீண்டும் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் குழந்தையை தத்து எடுத்து அதனை வளர்த்து வரும் பெற்றோர், குழந்தையை பெற்ற தாயிடம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து குழந்தையின் தாய், மும்பை மாநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற ஆஜரான குழந்தையின் வளர்ப்பு பெற்றோர், குழந்தையை முறைப்படி தத்து எடுத்திருப்பதாகவும், எனவே மீண்டும் தாயிடம் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர். இதையடுத்து தத்தெடுப்பு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி வளர்ப்பு பெற்றோர் நீதிமன்றத்தில், அந்த குழந்தையை தத்தெடுத்ததற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.

பெற்ற தாய்க்கே உரிமை
ஆனால், அங்குதான் ட்விஸ்ட் காத்திருந்தது. அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து வளர்ப்பு பெற்றோர், குழந்தையை அதனைப் பெற்ற தாயிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. குழந்தையை வளர்க்கும் உரிமை குழந்தையைப் பெற்ற தாய்க்கே உள்ளது எனவும் நிதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications