‘டிரஸ்ஸை கழட்டுங்க.. செக் பண்ணணும்’.. மும்பை பெண் வழக்கறிஞருக்கு நடந்த பகீர் மோசடி
மும்பை: நாடு முழுவதும் சைபர் கிரைம் மோசடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் சமீபத்திய வலையில் மும்பை பெண் வழக்கறிஞர் சிக்கியுள்ளார். அந்தப் பெண் வழக்கறிஞரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்து, பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்பை கிழக்கு அந்தேரி பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் வழக்கறிஞரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு சென்றுள்ளது. எதிரில் பேசிய நபர், "நான் போலீஸ் அதிகாரி. நீங்கள் மணி லாண்டரிங் கேஸில் சிக்கியுள்ளீர்கள். உங்கள் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதுதொடர்பான விசாரணைக்கு வரவேண்டும்." என்று ஒரு தனியார் ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.

"ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வழக்கில், உங்களுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேக்கிறோம். விசாரணை மிகவும் ரகசியமாக நடைபெறுவதால் யாரிடமும் சொல்லக் கூடாது." என்றும் சொல்லியுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்டு ஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞரை உடைகளை கழற்றிவிட்டு அங்கிருந்த பெண் ஒருவர் சோதனை செய்துள்ளார். முதலில் இந்த சோதனைக்கு பெண் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.
"அடையாளத்தை உறுதிபடுத்துவற்கு நடத்தப்படும் வழக்கமான சோதனை" என்று கூறி சோதனை செய்துள்ளனர். இதையடுத்து விசாரணை செய்துவிட்டு அவரை அனுப்பியுள்ளனர்.வீடு திரும்பிய பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ச்சியாக அந்தப் பெண்ணுக்கு அவரின் நிர்வாண படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதில் அந்தப் பெண் வழக்கறிஞர் அதிர்ச்சியடைந்தார். என்ன செய்யலாம் என அவர் யோசிப்பதற்குள், மீண்டும்.. மீண்டும் சோதனையின் போது எடுத்த நிர்வாண படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தொடக்கத்தில் அவர்களின் கால் மற்றும் மெசேஜ்களுக்கு அந்தப் பெண் பதிலளிக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியாக பிளாக்மெயில் செய்ததால் அவர் பயந்துள்ளார்.
"டிராயில் இருந்து பேசுகிறோம். உங்கள் சிம் கார்டு மணி லாண்டரிங் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது." என்றும் கூறியுள்ளனர். மற்றொரு நபர், "அந்தேரி சைபர் கிரைம் போலீஸில் இருந்து பேசுகிறேன். உங்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். கைது செய்யப் போகிறோம்." என்று கூறியிருக்கிறார்.
நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டதன் அடிப்படையில், அவர்கள் சொன்ன வங்கி கணக்குக்கு அந்தப் பெண் ரூ.50,000 பணமும் அனுப்பியுள்ளார். அதன்பிறகும் பிளாக்மெயில் நிற்கவில்லை. இதனால் அந்தப் பெண் வழக்கறிஞர் நடந்த சம்பவம் முழுவதையும் தன் கணவரிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து இந்த மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் பவார் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "இதுபோன்ற போலி காவல்துறை அதிகாரிகளின் வீடியோ கால் மோசடி அதிகரித்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஏராளமான விழிப்புணர்வு செய்தும் மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.
இந்த வழக்கிலும் அதுதான் நடந்துள்ளது. முதல் அழைப்பு வந்ததும் அவர்கள் உடனடியாக காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உண்மையான காவல்துறை வீடியோ கால் எல்லாம் செய்ய மாட்டார்கள். பெண் அளித்தப் புகாரில் அவர் பணம் அனுப்பி வங்கிக் கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம்.
விரைவில் அந்த வங்கி கணக்கு யாருடையது என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications