ஹோட்டலில் ரூம் போட்டு செம ஜாலி.. மொத்தம் 8 மாதம்.. ரூ.25 லட்சம் பாக்கி.. கடைசியில் பார்த்தால்.. ஷாக்
8 மாதம் வாடகை தராமல் ஓட்டலில் இருந்து தப்பிய நபரை போலீசார் தேடுகிறார்கள்
மும்பை: ஸ்டார் ஓட்டலில் 8 மாதங்களாக வாடகையே தராமல், ஒருவர் பாத்ரூம் வழியாக எகிறி குதித்து தப்பி உள்ளார்.
நவிமும்பை கார்கர் பகுதியில் "ஹோட்டல் த்ரீ ஸ்டார்" என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஹோட்டலில் முரளிகாமத் என்ற நபர் கடந்த நவம்பர் மாதம் வந்து தங்கினார்.. இவர் மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்தவர்.
இந்த ஹோட்டலுக்கு வரும்போதே தன்னுடைய 12 வயது மகனையும் அழைத்து வந்தார்.. தான் சினிமாவில் வேலை பார்ப்பதாகவும், அது சம்பந்தமாக சில நாட்கள் தங்க வேண்டி உள்ளது என்றும் சொல்லி 2 காஸ்ட்லி ரூம்கள் தனித்தனியாக கேட்டுள்ளார்..

முன்பதிவு
வழக்கமாக ஹோட்டலில் யார் வந்து தங்கினாலும் அவர்களிடம் முன்பதிவு பணம் வாங்குவார்கள்.. ஆனால், முரளி முன்பணம் எதுவும் தரவில்லை.. அதற்கு பதிலாக தன்னுடைய பாஸ்போர்ட்டை தந்துவிட்டு, ஒரு மாதத்தில், சினிமாவில் தனக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும் என்றும், அதை வாங்கி அட்வான்ஸ் தருகிறேன் என்றும் சொல்லி உள்ளார்.

முரளி
ஹோட்டல் நிர்வாகமும் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு, அவர் பேச்சையும் நம்பி 2 காஸ்ட்லி ரூம்களை ஒதுக்கியது.. அதில் ஒரு ரூமை தங்க பயன்படுத்தி கொண்ட முரளி, இன்னொரு ரூமை ஆபீஸ் ரூமாக பயன்படுத்த தொடங்கினார்.. ஒரு மாதம் சென்றதும், அட்வான்ஸ் பணத்தை ஹோட்டலில் கேட்டனர்.. ஆனால் இன்னும் தனக்கு பணம் வந்து சேரவில்லை என்று சொல்லி இழுத்தடித்து கொண்டே வந்துள்ளார்.. கடைசிவரை அட்வான்ஸ் பணமும் தரவில்லை.. வாடகை பணமும் தரவில்லை.

நெருக்கடி
இதனால், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ரூம் வாடகை தர வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகம் நெருக்கடி தர ஆரம்பித்தது.. இந்நிலையில்தான், கடந்த மாதம் திடீரென ஒருநாள் அவரது அறை கதவு திறக்கவே இல்லை.. தொடர்ந்து கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது அவரையும், அவரது மகனையும் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வாடகை பாக்கி
2 பேருமே பாத்ரூம் ஜன்னல் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது... ஆனால், அந்த ரூமிலேயே லேப்டாப், செல்போன்கள் இருந்தன.. இதுவரை இவர்களின் 2 ரூம்களின் வாடகை பாக்கி மட்டும் 25 லட்சம் ரூபாயாம்.. எங்கெங்கோ தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.. ஹோட்டலை விட்டு ஊழியர்கள் பல பகுதிகளுக்கு சென்று இவர்களை தேடி பார்த்தனர்.. அவர்கள் எங்குமே கிடைக்கவில்லை..

விசாரணை
இதற்கு பிறகுதான் மும்பை போலீசுக்கு சென்றனர்.. முரளி கொடுத்த பாஸ்போர்ட் அட்ரஸை வைத்து அவரை தேடி வருகிறது போலீஸ்.. 8 மாதமாக ராஜபோக வாழ்க்கையை ஸ்டார் ஹோட்டலில் வாழ்ந்துவிட்டு, பாத்ரூம் ஜன்னல் வழியாக எகிறி குதித்த நபரால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications