"ரூ.20 கோடி வீடு.. எல்லாமே ஒரே நாளில் போச்சு.." மும்பையை வெளுத்த கனமழை.. புலம்பும் பொதுமக்கள்
மும்பை: மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் அங்குப் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கி, டிராபிக் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கனமழை மும்பை நகரை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்டுள்ளது. ரூ.20 கோடி கொடுத்து வாங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பும் கூட இதில் இருந்து தப்பவில்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் புலம்பித் தள்ளி வருகிறார்கள்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. இப்படி மும்பையில் தொடர்ச்சியாகக் கொட்டும் கனமழை காரணமாக நகரில் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக நேற்று அங்குப் பெய்த கனமழையால் நகர் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ரெட் அலர்ட்
இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ஊழியர்களும் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கனமழையால் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மும்பையில் கனமழை பெய்யும்போது இதே நிலை தான்.. வெள்ளம் சூழ்ந்த சாலைகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவின் முக்கிய நகரமாகவும் பொருளாதாரத் தலைநகராகவும் மும்பை கருதப்படுகிறது. மேலும், மும்பையில் ரியல் எஸ்டேட் மார்கெட்டும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அப்படியிருக்கும்போது ஒரு மழைக்குக் கூட தாங்காத அளவுக்கு உட்கட்டமைப்பு மோசமாக இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
ஒரே நாளில் போச்சு
நேற்று பெய்த கனமழை தொடர்பாகப் பல வீடியோக்களை இணையத்தில் பார்க்க முடியும். அதில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் அந்தேரி வெஸ்ட் பகுதியில் வீரா தேசாய் சாலையில் ஒரு மெர்சிடிஸ் சொகுசு கார் மழையில் சிக்கிக்கொண்டது. இது தொடர்பான போட்டோவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், மும்பை மழை எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் எல்லா கார்களும் மழையில் சிக்கி ஒரே நாளில் போச்சு என பதிவிட்டுள்ளனர்.
ரூ.20 கோடி பிளாட்
அதேபோல மற்றொரு நபர், "இது தெற்கு மும்பை - பிரபாதேவி, இங்கு நீங்கள் 15-20 கோடி ரூபாய்க்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குகிறீர்கள். ஆனாலும், மழை பெய்தால் காலி" என்று ட்வீட் செய்துள்ளார். கனமழையால் அந்தேரி சுரங்கப்பாதையும் மூடப்பட்டது. கிங்ஸ் சர்க்கிள், காந்தி மார்க்கெட்டில் ஸ்கூல் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. இதனால் உள்ளே இருந்த பள்ளி மாணவர்களைப் பயந்து போனார்கள். இருப்பினும் துரிதமாகச் செயல்பட்ட மும்பை போலீசார் அவர்களை மீட்டனர்.
நெரிசல்
பாந்த்ரா மற்றும் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே உள்ளிட்ட பிற பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்படி மும்பை முழுக்க பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான் காணப்படுகிறது. இதனால் மும்பை மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். எப்போ தான் மழை முடியும் என மக்கள் யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
மும்பை, தானே மற்றும் ராய்கட் மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு 'ரெட்' அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. திங்கட்கிழமை காலை 8.30 மணி வரை சாண்டாக்ரூஸ் நிலையத்தில் 99 மிமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications