மும்பையில் திடீரென நடுவழியில் நின்ற மோனோ ரயில்.. பீதியில் உறைந்த 442 பயணிகள்.. உச்சக்கட்ட பரபரப்பு!
மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு நடுவே, மோனோ ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டதால் நடு வழியில் நின்றது. இதனால் மோனோ ரயிலில் பயணித்த 442 பயணிகளும் சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் பெய்து வரும் கனமழையால் மொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. மும்பையில் மட்டும் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், சாலைகள் எங்கும் வெள்ளக் காடாக மாறியது. 8 மணி நேரத்தில் மட்டும் 177 செமீ மழை கொட்டித் தீர்த்தது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த மழை காரணமாக, நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து முழுவதும் முடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று மகாராஷ்டிரா அரசு சார்பாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி சார்பாக மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே வெள்ளத்தின் போதும் கூட மக்களின் போக்குவரத்திற்காக மோனோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த மோனோ ரயில் மைசூர் காலணி அருகே வந்த போது, மோனோ ரயிலுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது. சரியாக செம்பூர் மற்றும் பக்தி பார்க் இடையில் மோனோ ரயில் நின்றது. இதனால் பயணிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக பயணிகளை மீட்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக வேறு மோனோ ரயில் மூலமாக இழுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த மோனோ ரயிலில் பயணிகள் நிரம்பி இருந்ததால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இதன்பின் முதலில் பயணிகளைப் பத்திரமாக மீட்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்பின் Fire Brigade கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு பயணிகளாகக் கீழ் இறக்கப்பட்டனர். மாலை 6.38 மணிக்கு மோனோ ரயில் நடுவழியில் நின்ற நிலையில், பயணிகளை மீட்கும் பணிகள் மட்டும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இறுதியாக 442 பயணிகளும் 9.40 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டனர். மோனோ ரயில் நடுவழியில் நின்றதற்கு அதிகளவில் பயணிகள் பயணித்ததே காரணமாகச் சொல்லப்படுகிறது.
மோனோ ரயிலின் மொத்த திறன் 104 டன்கள். ஆனால் மோனோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 109 டன்களாக இருந்திருக்கிறது. இதனால் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மோனோ ரயில் நடுவழியில் நின்றது தெரிய வந்துள்ளது. மேலும், மோனோ ரயில் நடுவழியில் நிற்பது முதல்முறையல்ல. 2024ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்திலும் மோனோ ரயில் நடுவழியில் நின்றுபோனது.
கனமழை காரணமாக மும்பை மக்கள் ஏற்கனவே பல்வேறு துயரங்களை அனுபவித்து வரும் நிலையில், மோனோ ரயில் நடுவழியில் நின்றுபோனது கூடுதல் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் மும்பை மாநகரில் அடுத்த 2 நாட்கள் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications