நகர் முழுக்க மொத்தமாக மாயமான தர்பூசணிகள்! மும்பை குடும்பத்தின் மர்ம மரணம்! காரணம் கெமிக்கல் வில்லன்?
மும்பை: மகாராஷ்டிராவில் பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்ட குடும்பம் உயிரிழந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மாதிரிகளைச் சேகரிக்கச் சென்ற அதிகாரிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் எந்தவொரு கடையிலும் தர்பூசணி பழங்களே கிடைக்கவில்லையாம். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மர்மமான முறையில் தர்பூசணிப் பழங்கள் சந்தையிலிருந்து மாயமாகியுள்ளன. இது அங்கு போலீசாரிடமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்பூசணி
தெற்கு மும்பையின் பைதோனி பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பம், இரவு உணவுடன் தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனால், அங்கே ஒரு விசித்திரமான சவால் அதிகாரிகளுக்குக் காத்திருந்தது.
திடீரென மாயம்
அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பைதோனி பகுதியில் எஃப்.டி.ஏ குழுவினர் தர்பூசணி மாதிரிகளைச் சேகரிக்க முகாமிட்டுள்ளனர். ஆனால், அந்தப் பகுதியில் ஒரு வியாபாரி கூட தர்பூசணி விற்கவில்லை என்பது அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தர்பூசணியில் தான் இங்குப் பிரச்சினை இருக்கிறது. ஆனால், விசாரணையில் எங்களால் தர்பூசணியை கண்டுபிடிக்கவே முடியவில்லை.. இப்படி ஒரு பொருள் சந்தையிலிருந்தே ஒட்டுமொத்தமாக மறைந்துவிடுவது இதுவே முதல்முறை.. இது விசித்திரமாக இருக்கிறது" எனக் குறிப்பிடுகின்றனர். பல நாட்களாகத் தேடியும் ஒரு தர்பூசணி மாதிரி கூட கிடைக்கவில்லை என்பது மர்மத்தை அதிகப்படுத்தியுள்ளது.
கடும் பாதிப்பு
இந்த மரணங்கள் ஏற்படுத்திய பயம் காரணமாக, அப்பகுதியில் தர்பூசணி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாம். மக்கள் தர்பூசணி வாங்கவே தயங்குவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வாங்கிய பழங்களையும் கூட திரும்பக் கொண்டு வருவதாகவும் ஜூஸ் கடைகளிலும் தர்பூசணி ஜூஸ் விற்பனை 50 சதவீதம் வரை சரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது வரை விசாரணைக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், மரணத்திற்கு தர்பூசணி காரணமாக இருக்காது என்றும் ஏனென்றால் குறுகிய நேரத்தில் புட் பாய்சனிங் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இணையத்தில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் பீதி காரணமாகத் தங்கள் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அன்று நடந்தது என்ன?
ஏப்ரல் 27ம் தேதி, அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நசீம் (35), மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகிய இரவில் வீட்டில் உறவினர்களுடன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். உறவினர்கள் கிளம்பிய பிறகு.. நள்ளிரவு குடும்பத்தினர் மட்டும் தர்பூசணிப் பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே நால்வருக்கும் வாந்தி ஏற்பட்டு, அரை மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர். நிலைமை மோசமானதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அச்சம் வேண்டாம்
உயிரிழந்தோரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் முடிவு இன்னும் வரவில்லை. இருப்பினும், இந்த மரணங்கள் குறித்து மருத்துவர்கள் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்த விதம், சாதாரண புட் பாய்சனிங் போலத் தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர். ஏதோ கெமிக்கல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றே மருத்துவர்கள் கருதுகிறார்கள். மேலும், பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தானது என்று பரவும் தகவல்களுக்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர்












Click it and Unblock the Notifications