மழையால் தடைப்பட்ட இந்து ஜோடியின் திருமணம்.. ரிசப்ஷன் மேடையை வழங்கிய இஸ்லாமிய ஜோடி.. நெகிழ்ச்சி
புனே: புனேவில் திறந்த வெளியில் புல்தரையில் வைத்து இந்து ஜோடி திருமணம் செய்ய இருந்தனர். ஆனால் திடீரென்று மாறிய வானிலையால் கனமழை கொட்டி தீர்த்தது. புல்தரையை பயன்படுத்த முடியாத நிலை உருவானது. இதையடுத்து அருகே உள்ள மண்டபத்தில் இஸ்லாமிய ஜோடி தங்களின் ரிசப்ஷன் மேடையை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே வானவாடியில் மாநில ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தின் அருகே அலங்காரன் புல்வெளி உள்ளது. இது திறந்தவெளி பகுதியாகும். இங்கு திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில் இந்த புல்வெளியில் சங்குரதி கவாடே மற்றும் நரேந்திரா காலந்தி ஆகியோரின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

சங்குரதி கவாடே - நரேந்திரா காலந்தி ஆகியோரின் திருமணம் கடந்த 20ம் தேதி மாலை 6.56 மணிக்கு நடைபெற இருந்தது. இதையடுத்து மணமகன், மணமகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமண விழாவுக்கு வருகை தந்தனர். இருகுடும்பத்தாரும் தங்களின் உறவினர்ளை வரவேற்றனர். திறந்த வெளியில் போடப்பட்டு இருந்த இருக்கையில் அவர்கள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது திடீரென்று வானிலை மாறியது. லேசாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அடுத்த சில நிமிடங்களில் கனமழையாக பெய்தது. இதனால் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திறந்தவெளி புல்வெளி சேதமானது. தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அங்கு திருமணத்தை நடத்த முடியாத நிலை உருவானது.
இதனால் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் செய்வதறியாது தவித்தனர். இந்த வேளையில் அருகே திருமண மண்டபம் ஒன்று இருந்தது. அங்கு இஸ்லாமிய ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பரூக் காஸியின் மகன் மோஷின் மற்றும் மாஹின் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இதையடுத்து இந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய இஸ்லாமிய குடும்பத்தினரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறினர். மேலும் சிறிது நேரம் திருமண மண்டப மேடையை தந்தால் திருமணத்தை முடித்துவிட்டு செல்வதாககூறினர்.
இதையடுத்து அந்த இஸ்லாமிய குடும்பம் பெருந்தன்மையாக அனுமதி கொடுத்தது. இதையடுத்து இந்துஜோடியான சங்குரதி கவாடே - நரேந்திரா காலந்தி ஆகியோரின் திருமணம் அந்த மண்டபத்தில் வைத்து நடந்து முடிந்தது. அதன்பிறகு இந்து ஜோடி சங்குரதி கவாடே - நரேந்திரா காலந்தி, இஸ்லாமிய ஜோடியான மோஷின் - மாஹின் ஆகியோர் ஒரே மேடையில் நின்று போட்டோ எடுத்து கொண்டனர். இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications