மும்பையில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதற்கு சீனாவின் நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர் விளக்கம்
மும்பை: கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பையில் மின்சாரம் முற்றிலும் செயலழிந்து போனதற்கு பின்னால் சீனாவின் சதி வலைகள் இல்லை என்று மத்திய அமைச்சர் ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்
Recommended Video
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் கடந்த ஆண்டுஅக்டோபர் 12-ம் தேதி திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள், போக்குவரத்து சிக்னல்கள், மருத்துவமனைகள், பங்குச் சந்தைகள் முடங்கின. சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு மின் விநியோகம் சீரடைந்தது.
இதனிடையே மகாராஷ்டிரா மாநில அரசு, மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (எம்.இ.ஆர்.சி) மற்றும் மத்திய மின்சார ஆணையம் ஆகியவை மின் தடைக்கான காரணத்தை ஆராய தனித்தனி குழுக்களை அமைத்தன இது தொடர்பாக மகாராஷ்டிர மின் துறை அமைச்சர் நிதின் ரவுத் பேசும் போது இதில் சதி இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தப் படும் என்றார்.
இதற்கிடையே இந்தியாவின் மின் கட்டமைப்பை தாக்க சீனாவில் இருந்து முயற்சிகள் நடப்பதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டது, இந்நிலையில் மத்திய மின்வாரிய அமைச்சர் ஆர் கே சிங், சீனாவின் சதி என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது முற்றிலும் "மனித பிழை" காரணமாக ஏற்பட்டதாக தெரிகிறது. வல்லுநர்கள் குழு மின்வாரிய அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கையில் , மும்பையில் செயலிழப்புக்கு பொறியாளர் மற்றும் ஆபரேட்டர்களின் பிழை தான் காரணம் என்று கூறியுள்ளார்கள் என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் ஒரு குழுவை மும்பைக்கு அனுப்பியிருந்தோம், அவர்களின் முடிவு என்னவென்றால், ஆபரேட்டர்கள் மற்றும் மாநில மின்சார விநியோக முறையை கையாளுபவர்களால் ஏற்பட்ட தவறுகள் காரணம் என்றார்கள். தவறுகள் நடந்த இடத்தை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தவறுகள் செய்தவர்களை குறிப்பிட்டுள்ளோம். அவர்களை அழைத்து விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கடிதம் எழுதுவேன், "என்று ஆர் கே சிங், கூறினார்