12 மணி நேரம் தாமதம்.. விமான ஓடுதளத்தில் இருந்து டின்னர் சாப்பிட்ட பயணிகள்.. என்னதான் ஆச்சு?
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இண்டிகோ விமானம் அருகே அமர்ந்து பயணிகள் இரவு உணவு உட்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
டெல்லியில் நேற்று கடுமையான பனிமூட்டம் நிலவியதால் பல விமானங்கள் தாமதம் ஆனது. 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன. இதனால், பயணிகள் பலரும் விமானம் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியதால் டெல்லி விமான நிலையத்தில் ஒருவித பரபரப்பான சூழலே காணப்பட்டது. அதே நேரம் சில பயணிகள் டெல்லி விமான நிலையத்தின் செக் இன் கவுண்டர்களுக்கு சென்று எப்போதுதான் விமானம் புறப்படும் என விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்தனர்.

இதேபோல் இண்டிகோ விமானம் பல மணி நேரம் தாமதம் ஆனதால் பயணி ஒருவர் விமானியை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானியை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் விமானிகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம் ஆவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பை விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் அருகே இருந்து பயணிகள் இரவு உணவு சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர் அதில் கூறியிருந்தாவது:- 12 மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டதால் கோவா - டெல்லி இண்டிகோ விமான பயணிகள் இண்டிகோ விமானம் அருகே இருந்து டின்னர் சாப்பிடுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டும் அறிக்கையில், "டெல்லியில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானம் (6E2195) மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications