ஒன்று கூடிய குடும்பம்.. சரத்பவாருடன் கைகோர்த்த அஜித் பவார்! மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, புனே மாநகராட்சிக்கான இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை சரத் பவாரும், அஜித் பவாரும் இறுதி செய்துள்ளனர். இதையடுத்து, பிம்ப்ரி - சின்ச்வாட் மாநகராட்சியில் சரத் பவாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அஜித் பவார் அறிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் தலைமையில் ஒரு அணியாகவும், கட்சியின் நிறுவனர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இதில் அஜித் பவார் அணிக்கு கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி தேர்தல்
மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். முன்னதாக கடந்த 2 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதன் முடிவுகள் கடந்த 21 ஆம் தேதி வெளியாகின. இதில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது 29 மாநகராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாநகராட்சி தேர்தலில் மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் வார்டு பங்கீட்டில் குழப்பம் நீடிக்கிறது. பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) தனித்துப் போட்டியிட முடிவு செய்தது.
குடும்பம் ஒன்றாக வந்து இருக்கிறது
இந்த நிலையில்தான், திடீர் திருப்பமாக, புனே மாநகராட்சிக்கான இடப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை சரத் பவாரும், அஜித் பவாரும் இறுதி செய்துள்ளனர். இதையடுத்து, பிம்ப்ரி - சின்ச்வாட் மாநகராட்சியில் சரத் பவாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அஜித் பவார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஜித் கூறுகையில், குடும்பம் ஒன்றாக வந்து இருக்கிறது. தேர்தலுக்கு வேட்பாளர் லிஸ்டை இறுதி செய்யும் போது, இரு அணிகளும் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளன. இதன் முடிவுகள் பற்றி பல கேள்வி எழும். சில நேரங்களில் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. சீட் பங்கீடு தொடர்பாக உள்ளூர் தலைவர்களுடன் நான் ஆலோசித்தேன். விரைவில் அதுபற்றி அறிவிக்கப்படும்," என்றார்.
இரண்டாக பிரிந்த அஜித் பவார் - சரத் பவார்
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார் தலைமையில் ஒரு அணியாகவும், கட்சியின் நிறுவனர் சரத் பவார் தலைமையில் ஒரு அணியாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இரு அணிகளும் கட்சிக்கு உரிமை கோரிய நிலையில், அஜித் பவார் அணிக்கு கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
மகாராஷ்டிராவில் அதன்பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து அஜித் பவார் போட்டியிட்டார். காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. தேர்தலில் அஜித் பவாரை உள்ளடக்கிய பாஜக கூட்டணி வென்றது.
2 ஆண்டுகள் கழித்து
காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அடங்கிய சரத் பவார் அணி தோல்வியை தழுவியது. அதன்பிறகு 2 ஆண்டுகள் கழித்து முக்கிய திருப்பமாக மாநகராட்சி தேர்தலுக்காக இரண்டு அணிகளும் கூட்டணி அமைத்துள்ளது மகாராஷ்டிர அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி, மும்பை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக அதிக பட்ஜெட் போடும் மாநகராட்சியாக உள்ளது. இந்த மாநகராட்சியில் பவாருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ள இடமாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிளவுபடாத தேசியவாத காங்கிரஸ் இந்த மாநகராட்சியை தங்கள் கைவசம் வைத்து இருப்பதால் இந்த முறையும் இரு அணிகளும் ஒன்றாக களமிறங்க உள்ளன.












Click it and Unblock the Notifications