திடீர் பரபரப்பு..! பிரதமர் மோடி கோயில்.. இரவோடு இரவாக திடீரென 'மாயமான' மோடி சிலை.. என்ன ஆச்சு?
மும்பை: மகாராஷ்டிராவின் புனேவில் அண்மையில் திறக்கப்பட்ட மோடி கோயிலுக்கு பிரதமர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக்கோயிலில் இருந்த பிரதமர் மோடியின் சிலை, இரவோடு இரவாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த 37 வயதான பாஜக தொண்டர் மயூர் முண்டே பிரதமர் மோடியின் செயல்களால் உந்தப்பட்டவர்.
இவர் அவுந்த் என்ற பகுதியில் பிரதமர் மோடிக்கு எனத் தனியாக ஒரு கோயிலைக் கட்டினார். அதில் பிரதமரின் சிலையும் நிறுவப்பட்டது.

பிரதமருக்கு தனி கோயில்
'நமோ பவுண்டேசன்' என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், சுமார் 1.6 லட்சம் செலவில் இந்த கோயிலைக் கட்டியுள்ளார். ஜெய்ப்பூர் பளிங்குக் கற்களில் செதுக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிலையும் இந்த கோயிலில் நிறுவப்பட்டது. மேலும், பிரதமர் மோடியை வாழ்த்தும் வகையில் சிறப்புப் பாடலும் இங்கு எழுதப்பட்டிருந்தது. இது குறித்து மயூர் முண்டே கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் அமையக் காரணமாக இருந்த நபருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் பிரதமர் மோடிக்குக் கோயில் கட்டினேன்.

பிரதமர் அலுவலகம் எதிர்ப்பு
முத்தலாக் தடை, சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட செயல்களே கோயில் கட்ட உந்துதலை ஏற்படுத்தியது" என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்தக் கோயில் திறக்கப்பட்டது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில் இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாகப் பிரதமர் அலுவலகமும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இரவோடு இரவாக மாற்றம்
இதையடுத்து இந்தக் கோயிலில் அமைந்திருந்த சிலை இரவோடு இரவாக நீக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்குள்ள மக்கள் அந்த வழியே சென்ற போது கோயிலில் இருந்த மோடியின் சிலை காணப்படவில்லை. அந்த கோயிலும் ஆரஞ்சு நிற ஷீட்களைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. அந்தச் சிலை இப்போது அருகில் வசிக்கும் பாஜக கவுன்சிலர் ஒருவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புனேவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே பாஜக இந்த கோயிலைக் கட்டியுள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் விமர்சித்திருந்தது. மேலும், கோயிலை முற்றுகையிட்டு, அங்கு வருவோருக்கு அன்னதானம் வழங்கி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நிலைமை மோசமாவதற்குள் அச்சிலை அகற்றப்பட்டு, கோயிலும் மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications