உயிரிழந்துவிட்டதாக பொய் செய்தி.. சிறைக்கு செல்லும் பூனம் பாண்டே? 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்குமாம்
மும்பை: பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தான் உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் தவறான தகவலைப் பரப்பியதற்காகச் சிறைக்குச் செல்லவும் நேரிடும்.
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஒரு போஸ்ட் பதிவிடப்பட்டது. அதாவது பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததால் இதனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

பூனம் பாண்டே: அந்த போஸ்ட்டில், "இன்று காலை எங்களுக்கு மோசமான நாளாக விடிந்தது. எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழந்தார்.. அவர் தான் பழகிய எல்லோரிடமும் தூய அன்புடனும் கருணையுடனும் இருந்தார். மிகவும் அன்பான நபர் அவர். இந்த துயர நேரத்தில், நாங்கள் அவரை அன்புடன் நினைவுகூருகிறோம்" என்று பதிவிடப்பட்டு இருந்தது.
32 வயதே ஆன பூனம் பாண்டே சமூக வலைத்தளத்தில் வந்த இந்த போஸ்ட் இணையம் முழுக்க தீயாகப் பரவியது. அவரது ரசிகர்கள் தொடங்கி பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்தச் சூழலில் தான் இன்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் மற்றொரு வீடியோவை பகிர்ந்தனர். அந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சியைத் தருவதாக அது இருந்தது. ஏனென்றால் அந்த வீடியோவில் இருந்தவர் பூனம் பாண்டே.
மரணமடையவில்லை: உயிருடன் இருந்து கொண்டே பூனம் பான்டே தனது இன்ஸ்டாகிராமில் மரணமடைந்துவிட்டதாகப் பதிவிட்டுள்ளார். இந்த புதிய வீடியோவில், "நான் உயிருடன் தான் இருக்கிறேன். நான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் மரணமடையவில்லை.. துரதிர்ஷ்டவசமாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரை இழந்த நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பெண்களால் இதேபோல சொல்ல முடியாது" என்று கூறியிருந்தார்.
மேலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படிச் செய்ததாகவும் தன்னை அனைவரும் மன்னிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இருப்பினும், அவரது இந்த நடவடிக்கை இணையத்தில் எதிர்மறையான ரியாக்ஷன்களை தான் பெற்றுத் தந்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்த என்ற போதும் இப்படி எல்லாம் செய்யலாமா எனப் பலரும் சாடினர். உயிரிழந்துவிட்டதாகச் சொல்வதெல்லாம் ரொம்பவே தவறான நடவடிக்கை என்று பலரும் சாடினர்.
5 ஆண்டுகள் வரை சிறை: இன்னும் சிலர் பூனம் பாண்டேவை பிடித்து ஜெயலில் போட வேண்டும் என்றும் சாடியுள்ளனர். ஆனால், உண்மையில் சட்டப்படி பார்த்தால் பூனம் பாண்டே தனது செயலுக்காக ஜெயிலுக்கு கூடப் போக வேண்டி இருக்கும். 2000ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67இன் படி, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வரை சிறைத் தண்டனை கிடைக்கும். மேலும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்தச் சட்டத்தின்படி ஒருவர் திரும்பத் திரும்ப இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பலரும் இதுபோல செய்யத் தொடங்கிவிடுவார்கள் என்பதால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications