Briyani+ Watermelon: தர்பூசணியில் எலி மருந்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பின் மர்மம்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரியாணியும் தர்பூசணியும் சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் தர்பூசணியில் எலி மருந்து இருந்தது ஆய்வுகளில் தெரியவந்தது.
மும்பையில் வசித்து வந்த மொபைல் உதிரிபாகங்கள் விற்பனையாளர் அப்துல்லா டோகாடியா (45), அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் அவர்களது மகள்கள் ஸைனப் (13), ஆயிஷா (16) ஆகிய நால்வரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் 25ஆம் தேதி, அப்துல்லாவின் குடும்பத்தினர் ஐந்து உறவினர்களுக்குத் தங்களது வீட்டில் மட்டன் பிரியாணி விருந்து அளித்துள்ளனர். விருந்தினர்கள் சென்ற பிறகு, இரவு 1 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 5 மணி அளவில், குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவராக மயங்கினர். இதையடுத்து உடனடியாக மருத்துவ உதவி கிடைத்தும் பலனின்றி, அடுத்த சில மணிநேரங்களிலேயே நால்வரும் உயிரிழந்தனர்.
ஆரம்பத்தில் இது அசுத்தமான தர்பூசணியால் ஏற்பட்ட "உணவு விஷப்பாதிப்பு" (Food Poisoning) என நம்பப்பட்டது. மருத்துவர்களும் பிரியாணியால் பிரச்சனை இல்லை, ஏனென்றால் அப்துல்லா குடும்பத்தினருடன் அவரது உறவினர்களும் பிரியாணி சாப்பிட்டு அவர்கள் நலமாக இருக்கிறார்கள். இதனால் தர்பூசணி பழத்தின் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால், அவர்களது பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வேறு சில திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.
அசாதாரண நிறமாற்றம்: உயிரிழந்தவர்களின் மூளை, இதயம் மற்றும் குடல் பகுதிகளில் அசாதாரணமான பச்சை நிறத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண உணவு நஞ்சாவதால் ஏற்படும் அறிகுறி அல்ல என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
மார்பின் (Morphine) தடயம்: அப்துல்லா டோகாடியாவின் உடலில், வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மிக வீரியமான 'மார்பின்' மருந்தின் தடயங்கள் கண்டறியப்பட்டது.
விஷமே காரணம்: தர்பூசணியை விட, ஏதோ ஒரு வகை விஷம் அல்லது வேதிப்பொருள் உடலில் கலந்ததே மரணத்திற்கு நேரடி காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தடயவியல் சோதனைகள் சுட்டிக் காட்டின.
இந்தச் சம்பவம் குறித்து மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
தர்பூசணி மீதான சந்தேகம்: உயிரிழப்புகளுக்கும் தர்பூசணிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என FDA தெரிவித்தது. இருப்பினும், தர்பூசணியில் நச்சுப் பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்டிருந்ததா என்பதை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
உறவினர்களிடம் விசாரணை: இரவு விருந்தில் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஐந்து உறவினர்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தடயிியல் பரிசோதனையில் அவர்கள் 4 பேரும் சாப்பிட்ட தர்பூசணி பழத்தில் எலிமருந்து இருந்தது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உடல்களிலும், அவர்கள் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்திருந்த பழத்தின் மாதிரிகளிலும் எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இருந்ததாக தடயவியல் துறை கண்டறிந்துள்ளது.
இந்த எலி மருந்தை யாராவது வைத்தார்களா, இல்லை இவர்கள் எலி மருந்தை தர்பூசணியில் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு ஏதேனும் கடன் தொல்லையா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications