Mumbai Row: மும்பை மகாராஷ்டிர நகரம் இல்லையா? அவமதிச்சுட்டாரு! அண்ணாமலையை கைது செய்யுங்கள்! சீறும் சிவசேனா
மும்பை: "மும்பை ஒரு சர்வதேச நகரம், மகாராஷ்டிர நகரமல்ல" என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கூறியது அந்த மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்காக அண்ணாமலையைக் கைது செய்ய வேண்டும் என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) வலுவாகக் கோரியுள்ளது.

1960களில் நடந்த சம்யுக்த மகாராஷ்டிர இயக்கம், மும்பையை குஜராத்திடம் இழக்காமல் மகாராஷ்டிராவுடன் தக்கவைத்துக் கொண்டது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அண்ணாமலையின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், "இது பாஜகவின் கருத்தா? மகாராஷ்டிர தலைநகரைப் பற்றி எப்படி இப்படிப் பேச முடியும்? அவர் உயிர் தியாகம் செய்த 106 மராத்தி தியாகிகளை அவமதித்திருப்பதால், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைதி காப்பது ஏன் என்றும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார். இதற்கிடையில், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் ஆதித்ய தாக்கரே, மும்பை குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஜனவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைவர் அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அவர், "மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்" எனப் பேசியது, அம்மாநிலத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு மராத்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை ஒவ்வொரு முறையும் பேசும் போதெல்லாம் அது எதிர்க்கட்சியினருக்கே சாதகமாகிவிடுவதால் அவரை பாஜகவில் இருந்து புறக்கணித்துள்ளனர். அண்ணாமலையின் இந்தி மிகவும் மோசமாக இருக்கும். அவருக்கு எதுவுமே தெரியாது. எனவே அவர் மும்பை குறித்து பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என விமர்சித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடும் பதிலடி கொடுத்தார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உங்களுக்கும் (அண்ணாமலை) இந்த மண்ணுக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார். வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தமிழர்களை இழிவுபடுத்தும் விதமான அவரது பேச்சு பரவலான விமர்சனங்களைச் சந்தித்தது.












Click it and Unblock the Notifications