அவுரங்கசீப் சமாதி சர்ச்சை தேவையில்லாதது.. ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கருத்து!
மும்பை: முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது தேவையில்லாத சர்ச்சை என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து வலியறுத்தி வந்தன. இதனையடுத்து கடந்த 17ம் தேதி மத்திய நாக்பூர் பகுதியில் இவர்கள் ஒரு பேரணியை நடத்தினர். இதில் சமாதி மாதிரியை எரித்தனர்.

இதுதான் வன்முறைக்கான தொடக்கப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. வன்முறையில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்திருக்கின்றன. வன்முறை காரணமாக ஒரு வாரத்திற்கு நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. வன்முறை நடந்த பகுதி வணிக பகுதி என்பதால், வணிகர்களுக்கு கடுமையான தொழில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நாக்பூர் மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் வன்முறை அச்சம் சூழ்ந்திருந்தது. நாடு முழுவதும் இது பற்றி பேச்சுகள் தீவிரமடைந்த நிலையில், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி வன்முறை பற்றி தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
"ஒரங்கசீப்பின் சமாதி விவாதம் தேவையில்லாதது. அவர் இந்தியாவில் இறந்தார், அதனால் அவரது சமாதி இங்கு இருக்கிறது. அவர் மீது மரியாதை இருப்பவர்கள் அங்கு செல்கிறார்கள். சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெருமையையும், அவரது தர்மத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் தன்னுடைய எதிரி அஃப்சல் கானுக்கு சமாதி கட்டி விட்டார். இது இந்தியாவின் பெருமையும், சகிப்புத்தன்மையின் அடையாளமுமாகும். எனவே ஒரங்கசீப்பின் சமாதி எங்கு இருந்தாலும் அது அப்படியே இருக்கும்" என்று கூறியுள்ளார்.
விஎச்பி, பஜரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் அவுரங்கசீப்புக்கு எதிராக தொடர்ந்து முழக்கம் எழுப்பி வரும் நிலையில். ஆர்எஸ்எஸ் தலைவர் இப்படி கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
ஜோஷியை தொடர்ந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே கூறுகையில், "மதவெறி மற்றும் சாதி அரசியலில் மக்கள் சிக்க வேண்டாம். ஒரங்கசீப் மற்றும் அஃப்சல் கான் போன்றோரின் சமாதிகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை. மராத்தியர்களின் வீரத்தின் அடையாளமாக இதை நாம் பாதுகாக்கலாம். சிவாஜி மத அரசியல் நடத்தியவர் கிடையாது. அவர் நிலப்புரத்துவத்திற்கு எதிராக களம் கண்டவர்.
வன்முறைக்கு காரணம் தவறான தகவல்கள்தான். பல்கலைக்கழக புத்தகங்களை வாங்கி படியுங்கள். வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியிலிருந்து பாடங்களை படிக்க வேண்டாம். சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து விலக வைக்கும் வகையில் சிலர் தன்னிச்சையாக வரலாற்றை திரிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
நாக்பூரில் நடந்த வன்முறைக்கு காரணம் வதந்தி பரவல்தான். சமாதியின் மாதிரியை போராட்டக்காரர்கள் எரித்தபோது, அவர்கள் அத்துடன் சேர்த்து மதம் சம்பந்தமான துணியையும் எரித்துள்ளனர் என்று வதந்தி பரவியது. இதனையடுத்துதான் வன்முறை வெடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications