நள்ளிரவில் அலறல் சத்தம்! மகன் ரூமில் கத்தியுடன் மர்ம நபர்.. என்ன நடந்தது! சைஃப் அலி கான் வாக்குமூலம்
மும்பை: சைஃப் அலி கான் வீட்டில் கடந்த வாரம் மர்ம நபர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே தாக்குதல் நடந்த அந்த ஜனவரி 16ம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து சைஃப் அலி கான் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த வாரம் புகுந்த மர்ம நபர் அவரை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு ஜனவரி 21ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் சைஃப் அலி கான் அளித்த வாக்குமூலம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சைஃப் அலி கான் வாக்குமூலம்:
சம்பவம் நடந்த போது தானும் மனைவி கரீனா கபூரும் தங்கள் பெட் ரூமில் இருந்ததாகவும் அப்போது தான் வீட்டில் உதவியாளராக வேலை செய்து வரும் எலியாமா பிலிப்பின் அலறல் சத்தம் கேட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எலியாமா பிலிப் தான் சைஃப் அலி கானின் இளைய மகனான ஜெஹ் எனப்படும் ஜஹாங்கீரை பார்த்துக் கொள்கிறார். இதனால் பொதுவாக ஜெஹ் ரூமில் தான் எலியாமா பிலிப் தூங்குவார். எலியாமா பிலிப்பின் அலறல் சத்தம் கேட்டவுடன் என்னவென்று பார்க்க சைஃப் அலி கான் அங்குச் சென்றுள்ளார். ஜெஹ் அழுது கொண்டு இருந்த நிலையில், அந்த மர்ம நபரைப் பிடிக்க முயன்றதாக சைஃப் அலி கான் தெரிவித்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த நபர் குத்தியதாகவும் சைஃப் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது:
அதாவது அந்த மர்ம நபரை சைஃப் அலி கான் பிடித்துள்ளார். இதனால் அந்த மர்ம நபர் முதுகு, கழுத்து மற்றும் கைகளில் பலமுறை குத்தியுள்ளான். இதில் சைஃப் அலி கானின் பிடி தளர்ந்த நிலையில், அந்த நபர் தப்பித்துவிட்டார். அதற்குள் ஜெஹ்வையும் எலியாமா பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
56 வயதான எலியாமா தான் முதலில் அந்த மர்ம நபரைப் பார்த்துள்ளார். ஜெஹ் ரூமில் புகுந்த அந்த நபர் ஒரு கோடி ரூபாயைக் கேட்டு மிரட்டியதாக எலியாமா தெரிவித்துள்ளார். இந்த மோதலில் வீட்டு உதவியாளர் எலியாமா பிலிப்பிற்கும் லேசான காயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் ஜனவரி 16ம் தேதி அதிகாலையில் நடந்துள்ளது. இதையடுத்து சைஃப் அலி கான் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதிகாலையில் கார் எடுத்துக் கொண்டு இருந்தால் லேட் ஆகும் என்பதால் ஆட்டோ மூலமாகவே சைஃப் அலி கான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆறு இடங்களில் கத்திக்குத்து:
மொத்தம் ஆறு இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் அதில் இரண்டு காயங்கள் ஆழமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக ஒரு காயம் அவரது முதுகு தண்டுவடத்திற்கு மிக அருகே ஏற்பட்டுள்ளது. அந்த கத்திக்குத்து முதுகுத்தண்டில் இருந்து வெறும் 2 மில்லிமீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், கழுத்து மற்றும் கையில் ஏற்பட்ட காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்ற சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 21ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
யார் அந்த மர்ம நபர்:
நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் நுழைந்த அந்த மர்ம நபர் கொள்ளை அடிக்கும் நோக்கிலேயே வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் சில நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபரை தானேவில் வைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்பதும் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடந்த சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் ஷரிபுலின் கைரேகைகளுடன் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த குழாய் மூலமாகவே அந்த நபர் 11ஆவது மாடிக்கு ஏறியதாகவும் அந்த குழாயில் இருந்தே கைரேகைகள் எடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications