ட்விஸ்ட்! மிரட்டல் விடுத்த பிஷ்னோய் கேங்.. திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்த சல்மான் கானின் Ex காதலி
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் நெருக்கமான உறவில் உள்ள அனைவருக்கும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கேங் மிரட்டல் விடுத்திருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சல்மான் கானின் முன்னாள் காதலியான நடிகை சோமி அலி இப்போது தனது இன்ஸ்டாகிராமில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை என்சிபி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக் மும்பையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாபா சித்திக்: தனது மகனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குச் சென்ற பாபா சித்திக், வெளியே நின்று கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத சிலர் அவர் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பாபா சித்திக் படுகாயமடைந்த நிலையில், அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த பாபா சித்திக் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஆவார். பாபா சித்திக் கொலை குறித்த தகவல் கேட்டவுடன் சல்மான் கான் உடனடியாக தனது பிக்பாஸ் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அங்கு விரைந்துள்ளார். பாபா சித்திக் கொலைக்கு பிஷ்னோய் கேங் பொறுப்பேற்றுள்ளது. பிஷ்னோய் இப்போது குஜராத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தபடியே தனது கேங்கை கட்டுப்படுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் நடந்தது.
மிரட்டல்: மேலும், சல்மான் கானுக்கு உதவும் அனைவரும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று பிஷ்னோய் கேங் மிரட்டல் விடுத்து இருந்தது. இதற்கிடையே பாலிவுட் நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலியான நடிகை சோமி அலி, தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். என்ன பிரச்சினை என்பது குறித்து பேசி தீர்க்கலாம் என்றும் ஜூம் கால் மூலம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அழைப்பு: இது தொடர்பாகச் சோமி அலி தனது இன்ஸ்டாகிராமில், "வணக்கம் லாரன்ஸ்.. நீங்கள் சிறையில் இருந்தும் கூட ஜூம் காலில் பேசுவீர்கள் என்று கேள்விப்பட்டேன். இதனால் உங்களுடன் நான் சில விஷயங்கள் குறித்துப் பேச விவாதிக்க விரும்புகிறேன். நாம் எப்படிப் பேசலாம் என்பது குறித்து நீங்களே சொல்லுங்கள்.
உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ராஜஸ்தான். உங்கள் கோயிலுக்கு நேரில் வந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு உங்களுடன் பேச விரும்புகிறேன். இது நிச்சயம் உங்களுக்கு நல்லதையே தரும். இதில் நீங்கள் என்னை நம்பலாம். உங்கள் செல்போன் நம்பரை கொடுங்கள், பேசலாம்.. நன்றி" என்று அவர் போஸ்ட் செய்துள்ளார்.
முன்னாள் காதல் ஜோடி: 1990களில் சல்மான் கான்- சோமி அலி காதலித்து வந்தனர். இவர்களின் காதல் பல ஆண்டுகள் தொடர்ந்தது. 1999ம் ஆண்டு இருவரும் காதலை முறித்துக் கொண்டனர். அப்போது சல்மான் கான் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக எல்லாம் சோமி அலி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் பிஷ்னோய் கேங்கை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications