பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேருவதற்கான காரணமே அத்வானியும், ஜோஷியும்தான்.. சத்ருகன் சின்ஹா
Recommended Video

மும்பை: பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேருவது ஏன் என்பது குறித்து பாட்னா சாஹிப் எம்.பி.யான சத்ருகன் சின்ஹா பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியின் எம்பியாக இருக்கும் சத்ருஹன் சின்ஹா, பாஜகவிலிருந்து விலகியுள்ளார். விரைவில் அவர் காங்கிரஸில் இணையவுள்ளார்.
பாஜகவில் இருந்த போதே அக்கட்சியின் செயல்பாடுகள் அவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மம்தா, ராகுலை பாராட்டிய சின்ஹா, அவர்களது கூட்டத்தில் கலந்து கொண்டு ரபேல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

விலகலுக்கான காரணம்
இந்த நிலையில் காங்கிரஸில் இணையும் சத்ருகன், அக்கட்சி சார்பில் பாட்னா சாஹிப் எம்பி தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்நிலையில் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் பாஜகவிலிருந்து விலகியதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

மனவலி
அவர் கூறுகையில், பாஜகவில் நீண்ட காலம் பணியாற்றிவிட்டு தற்போது விலகுவது வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்சி இரு நபர்கள்
வாஜ்பாய் காலத்தில் கூட்டாக ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் இப்போதோ ஒரு நபர் கட்சி இரு நபர்கள் மட்டுமே முடிவு எடுக்கும் வகையில்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் நான் சேருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது பழமையான கட்சி, இந்த கட்சியில் காந்தி, பட்டேல், நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் இருந்தனர்.

பாட்னா சாஹிப்
பாஜகவில் நான் விலகியவுடன் மம்தா, அகிலேஷ், கேஜரிவால் உள்ளிட்டோர் அவர்களது கட்சிக்கு என்னை அழைத்தனர். ஆனால் நான் காங்கிரஸுக்கு வந்ததற்கு காரணம் பாட்னா சாஹிப் தொகுதி எனக்கு ஒதுக்க வேண்டும் என கூறியதுதான்.

என் சொந்த முயற்சி
கடந்த தேர்தலில் நான் மோடி அலையால் வெற்றி பெறவில்லை. மோடி அழிவு தான் இருந்தது. எனது நண்பர், வழிகாட்டி, தத்துவவாதியான எல்.கே.அத்வானி, ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங் போன்ற பா.ஜனதா தலைவர்களை கூட நான் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. இவ்வளவு ஏன், எனது மகளும் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹாவை கூட அழைக்கவில்லை.

சரியான தருணம்
மிகவும் பிரபலமான சொற்றொடரான காவலாளியே திருடன் என்பதை உருவாக்கிய ராகுல் நிச்சயம் பிரதமராவதற்கான தகுதிகள் உள்ளன. பாஜக என் மீது நடவடிக்கை எடுப்பதாக நீண்ட காலமாக மிரட்டி வருகிறது. அதற்கு பதில் தரும் சரியான தருணம் இதுதான் என கருதுகிறேன் என்றார் சத்ருகன் சின்ஹா.












Click it and Unblock the Notifications