மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன் செமி பைனலாக நாளை மறுநாள் 11 எம்எல்சி தேர்வு- கலங்கும் கட்சிகள்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்னோட்டாமாக- செமி பைனல் போல 11 எம்.எல்.சி (சட்டமேலவை) இடங்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் ஜூலை 12-ல் நடைபெற உள்ளது. 11 எம்.எல்.சி. இடங்களுக்கு 12 வேட்பாளர்கள் களம் காண்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 9 இடங்களையும் உத்தவ் தாக்கரே சிவசேனா 9 இடங்களையும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 8, ஷிண்டே சிவசேனா 7, அஜித் பவார் தேசியவாத கஅங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றின. மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக கூட்டணி அதீதமாக நம்பி இருந்தது. ஆனால் பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

மகாராஷ்டிரா தேர்தல்: இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இருந்தே ஒவ்வொரு நாளும் மகாராஷ்டிரா அரசியல் பரபரப்புடனே இருந்து வருகிறது. தேர்தல் முடிவுகளின் போது பாஜக கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. காலம் காலமாக எதிரிகளாகவே இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வரானார். ஆனால் பாஜகவோ சிவசேனாவை உடைத்தது; தேசியவாத காங்கிரஸை உடைத்தது. உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்து புதிய கூட்டணி ஆட்சியையும் அமைத்தது. 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களைக் கண்டுள்ளது மகாராஷ்டிரா.
பாஜக கூட்டணியில் அதிருப்தி: தற்போது லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்திய அமைச்சரவை பதவிகள் தொடர்பாக பாஜக மீது அதன் கூட்டணி கட்சிகளான ஷிண்டே சிவசேனாவும் அஜித்பவார் தேசியவாத காங்கிரஸும் அதிருப்தியில் இருக்கின்றன.
எம்.எல்.சி தேர்தல்: இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றன. 11 காலி இடங்களுக்கு ஜூலை 12-ல் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 12 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வாக்குகளை மாற்றி போடுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக செமி பைனல் மேட்ச் போல இந்த மேலவை தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை பலம்: மகாராஷ்டிரா எம்.எல்.சி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் முதல் முறையாக 23 வாக்குகளைப் பெற வேண்டும். ஆளும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 203 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; எதிர்க்கட்சியான "இந்தியா" கூட்டணிக்கு 69 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. வாக்குச் சீட்டு முறையில்தான் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்த உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications