ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ஷாருக்கான்.. கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த முடிவாம்!
மும்பை: நடிகர் ஷாருக்கான் தமது ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். "பிறந்தநாளன்று எனக்காக காத்திருந்த அன்பான மக்கள் அனைவரையும் நான் வெளியே சென்று வரவேற்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு தெரிவித்து விட்டனர். உங்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். 1992ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஷாருக்கானுக்கு, 1995 ஆம் ஆண்டு வெளியான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

நடிகர் ஷாருக்கானின் 60-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ரசிகர்களை ஷாருக் சந்திப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னால் நின்று ஷாருக்கான் எடுக்கும் செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரல் ஆகும்.
அந்தவகையில் ஷாருக்கானுக்கு வாழ்த்துக் கூற அவருடைய வீடு முன்பு நள்ளிரவு முதலே அவரது ரசிகர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த ஆண்டு தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இயலாததற்கு ஷாருக் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக ஷாருக்கான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்காக காத்திருந்த அன்பான மக்கள் அனைவரையும் நான் வெளியே சென்று வரவேற்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு தெரிவித்து விட்டனர். உங்கள் அனைவரிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நெரிசல் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாகவும் அனைவரது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை நம்பியதற்கும் புரிந்துகொண்டதற்கும் நன்றி. உங்களை விட அதிகமாக நான் உங்களைப் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்த்து அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆவலுடன் காத்திருந்தேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications