"ஐகானிக்" சரத்பவாரிடம் வச்சிக்கிட்டா "கதம் கதம்தான்".. மகாராஷ்டிரா சொல்லும் பாடம் இதுதான்!
Recommended Video
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா தேர்தலில் நடந்த அனைத்து வித சோதனைகளிலும் வெற்றி பெற்றுவிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் சடாரா தொகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
சடாராவில் தாம் தோற்பது உறுதி என்பதால் அங்கு வேட்பாளரை போட்டியிட வைப்பது பயனற்றது என கருதியே சரத்பவார் அத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்றார். இதையடுத்து கட்சியின் இருப்பை தக்க வைத்து கொள்ள சரத்பவார் கடந்த சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தை கையிலெடுத்தார்.

சட்டசபை தேர்தல்
மகாராஷ்டிராவில் 66 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவற்றில் பெரும்பாலும் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ள மாநிலத்தின் மேற்கு பகுதியாகும். சரத்பவாரின் சோர்வில்லாத தேர்த்ல பிரசாரமே என்சிபியை கிங் மேக்கர் ஆக்கியது. கடந்த 2014-இல் நடந்த சட்டசபை தேர்தலை விட 15 இடங்களில் கூடுதலாக இந்த தேர்தலில் மொத்தம் 54 இடங்களில் வெற்றி பெற்றது.

புலனாய்வு
மகாராஷ்டிரா தேர்தலில் ஒருவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கோ சரத்பவாருக்கோ யாரும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவர் அஜித் பவாருடன் சேர்ந்து ஒரு முறைகேடு வழக்கில் போராடி கொண்டிருந்தார். மத்திய புலனாய்வு அமைப்புகளெல்லாம் அந்த வழக்கை விசாரித்து வந்தன.

விமர்சனம்
இதனால் என்சிபி கட்சி தொடர்ச்சியாக நடந்த 2014 லோக்சபா தேர்தல், 2014 சட்டசபை தேர்தல், 2019-இல் லோக்சபா தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி பெறவில்லை. இதனால் சரத்பவாரின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதாக பலர் விமர்சனம் செய்தனர்.

என்சிபி- காங்கிரஸ்
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் சிவசேனா- பாஜக கூட்டணி ஒருபுறம் இருந்தது. மய்யத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இருந்தது. இதனிடையே பாஜகவிடம் முதல்வர் பதவியில் பங்கு கேட்டு சிவசேனா கூட்டணியை விட்டு வெளியேறியது. இதையடுத்து சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தது.

சரத்பவார்
இதற்காக சிவசேனாவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு பாலமாக சரத்பவார் இருந்து கூட்டணி பேச்சுகளை நடத்தினார். ஒரு கட்டத்தில் 3 கட்சிகளின் கூட்டணி உருவாகவும், மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் சரத்பவார் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக சிலர் கூறினர்.

முக்கியத்துவம்
சிவசேனாவும் காங்கிரஸும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த வேளையில் ஆளுநர் கோஷ்யாரியிடம் என்சிபி அளித்த கடிதமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புதிய கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்திய சரத்பவார் மெல்ல மெல்ல முக்கியத்துவத்தை இழப்பதாக இருந்தது.

புதிய ஆட்சி
ஆனால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து சூழல்களும் சரத்பவாருக்கு சாதகமாகின. குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி என்ற கூட்டணியை இறுதிப்படுத்துவது ஆகியவற்றை சரத்பவார் இறுதி செய்தார். 3 கட்சியும் இணைந்து ஒருமித்த கூட்டணி அமைந்த நிலையில் அஜித்பவார் பாஜக பக்கம் தாவி மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய காரணமாகினார்.

நிலையான ஆட்சி
அஜித்பவாரின் முடிவை சரத்பவார் ஏற்க மறுத்தார். மேலும் இது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் என்சிபியின் முடிவல்ல என்றும் தெரிவித்தார். இதையடுத்து துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவார், தான் என்சிபியில் இருப்பதாகவும் தனது தலைவர் சரத்பவார்தான் என்றும் , பாஜகவும் -என்சிபியும் இணைந்து நிலையான ஆட்சியை தரும் என ட்விட்டரில் பதவிட்டிருந்தார்.

பாஜக ஆட்சி
இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து சரத்பவார் பதில் அளித்தார். அதில் பாஜக- என்சிபி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அஜித் பவாரின் இந்த செயலுக்கு காரணம் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே என சொல்லப்பட்டது. சரத்பவாரின் அரசியல் வாரிசாக அஜித்பவார் கருதப்பட்ட நிலையில் சுப்ரியா சுலேவின் தலையீடும் அவருக்கான முக்கியத்துவமும் அதிகமாக இருந்ததை அஜித் விரும்பவில்லை. இதுவே சரத்பவாருக்கு துரோகம் இழைத்து விட்டு பாஜக ஆட்சி அமைத்து கொடுக்க காரணமாயிற்று.

அஜித்பவார் உணர்ந்தார்
எனினும் சரத்பவார் கலங்கவில்லை. அஜித்தை கட்சியிலிருந்து நீக்கவோ இடைநீக்கம் செய்யவோ இல்லை. மீண்டும் இந்த சூழலை சிறப்பாக கையாண்டார் சரத்பவார். அஜித் பவாரை மீண்டும் என்சிபிக்கு வருமாறு ஏராளமானோரை தூது அனுப்பிக் கொண்டே இருந்தார். மொத்தம் 54 என்சிபி எம்எல்ஏக்களில் 53 பேர் சரத்பவாருடன் இருந்ததால் தான் அணி மாறியது பயனற்றது என அஜித் பவார் உணர்ந்தார்.

முடிவுக்கு வந்தது பாஜக அரசு
பின்னர் துணை முதல்வர் பதவியை தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தேவேந்திர பட்னவீஸ் கூட்டிய அமைச்சரவை கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். இதையடுத்து தேவேந்திர பட்னவீஸ்- அஜித்பவாரின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பட்னவீஸும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக ஆடசி கவிழ்ந்தது, என்சிபி எம்எல்ஏக்களும் பாதுகாக்கப்பட்டனர். அஜித்பவாரும் அடக்கவைக்கப்பட்டார். இப்படியாக மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு நடந்த அனைத்து பிரச்சினைகளையும் திறமையாக கையாண்ட சரத்பவார் அவற்றில் வெற்றியும் பெற்றார்.












Click it and Unblock the Notifications