மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. சிவசேனா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிவசேனாவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டிருக்கிறார்.
இந்திய அரசியலில் மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இங்கு ஏற்படும் மாற்றங்கள் பல மாநிலங்களில் அரசியல் தாக்கமாக எதிரொலிக்கும். எனவே இம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் கூட்டணியான 'மகாயுதி' ஆட்சியில் இருக்கிறது.

மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தீவிர முயற்சிகளை இக்கூட்டணி மேற்கொண்டிருந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இக்கூட்டணிக்கு சாதகமாக அமையவில்லை. இந்நிலையில் புதிய வியூகங்களுடன் மீண்டும் களத்தில் வேலையை தீவிரப்படுத்தியுள்ளது மகாயுதி.
தேர்தலுக்கு சீட் பிரிப்பதில் கூட்டணிக்குள் கடும் அதிருப்திகள் எழுந்தன. குறிப்பாக ஷிண்டே பிரிவு சிவசேனா, கூடுதல் தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால் பாஜக இதற்கு ஒத்துவரவில்லை. கடந்த தேர்தலில் பட்னாவிஸைதான் பாஜக முதல்வராக்க திட்டமிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஷிண்டே முதல்வராக ஆக்கப்பட்டார். இதை சுட்டிக்காட்டிய பாஜக, உங்களுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்திருக்கிறோம், எனவே இந்த முறை எங்களுக்குதான் அதிக சீட் வேண்டும் என்று கூறியிருக்கிறது.
தொடக்கத்தில் சிவசேனா ஒத்து வராததால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. ஆனால் தற்போது பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையத்து நேற்று நள்ளிரவு சிவசேனா(ஷிண்டே) தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கோப்ரி-பச்பகடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாராமதி தொகுதியில் பெரியப்பா அஜித் பவாரை எதிர்த்து மகன் யுகேந்திர பவார் களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸை உருவாக்கிய சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே போட்டியிட்ட தொகுதியில், அஜித் பவார் தனது மனைவியை நிறுத்தியிருந்தார். இதில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றிருந்தார். இது குறித்து பேசிய அஜித், இனி இந்த தவறை செய்ய மாட்டேன், சொந்தங்களை எதிர்த்து போட்டியிட மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். இப்படி இருக்கையில் தற்போது அஜித் பவாரை எதிர்த்த யுகேந்திர பவார் நிறத்தப்பட்டிருப்பது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.
288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications