மகாராஷ்டிரா சட்டசபை கலைப்பு? சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ட்வீட்டால் பெரும் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை கலைக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதாக ஆளும் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியை சமானப்படுத்தும் முயற்சிகளை சிவசேனா தரப்பு மேற்கொண்டது. ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தற்போது சூரத்தைவிட்டு அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை கலைப்பு?
இருந்தபோதும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் சிவசேனாவின் முயற்சிகள் தொடருகிறது. இந்த முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் ஆட்சியை இழக்கும் சூழ்நிலை வரலாம். ஆட்சியை இப்போது இழந்தாலும் மீண்டும் போதுமான பலத்துடன் ஆட்சியை அமைப்போம் என கூறியிருந்தார். இப்பேட்டி வெளியான சிறிது நேரத்திலேயே சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள், சட்டசபை கலைக்கப்படுவதை நோக்கி செல்கிறது என குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எம்.எல்.ஏக்கள் கடத்தல்
மேலும் இது தொடர்பாக சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுவாக இத்தகைய அரசியல் குழப்பங்கள் ஏற்படும் போது மாநிலங்களில் சட்டசபை முடக்கப்படுவது அல்லது கலைக்கப்படுவது வழக்கம். எம்.எல்.ஏக்களை கடத்துவது; எம்.எல்.ஏக்களைக் கடத்திக் கொண்டு போய் வெளிமாநிலங்களில் அடைத்து வைப்பது என்பதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் இருந்து தப்பி வந்துள்ளார் எம்.எல்.ஏ. நிதின் தேஷ்முக். ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் அவரை தாக்கி மருத்துவமனையில் சேர்த்து ஊசி போட்டுள்ளனர். அவரைக் கொல்ல முயற்சி நடந்தது எனவும் நிதின் தேஷ்முக் கூறியிருக்கிறார் என்றார்.

உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முயற்சித்தார். ஆனால் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை என்றார் கமல்நாத். பின்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமே உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

அடுத்து என்ன நடக்கும்?
தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படுவது அல்லது முடக்கப்படுவது என்பது நிகழலாம்; மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் வரை ஜனாதிபதி ஆட்சி தற்காலிகமாக அமல்படுத்தப்படலாம். அப்படி சட்டசபை முடக்கப்பட்டு அல்லது கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் போது சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம்; பாஜகவும் தம் பங்குக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டும் என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications