ரொம்ப தப்புங்க.. மோடி, அமித் ஷா அமைச்சர்கள் சரத் பவாரை மிரட்டுகிறார்கள்! சிவசேனா பகீர் குற்றச்சாட்டு
மும்பை: மகாராஷ்டிரா அரசு இப்போது கவிழும் சூழல் உருவாகி உள்ள நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 2019 சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை அமைத்தது. 3 ஆண்டுகளாக ஆட்சிய சுமுகமாகச் சென்று கொண்டு இருந்தது.
இந்தச் சூழலில் தான் சிவசேனா முக்கிய தலைவரும் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஷிண்டே போர்க் கொடி தூக்கினார். சில நாட்களுக்கு முன்பு ஷிண்டே திடீரென மாயமானார்.

மகாராஷ்டிரா
முதலில் அவருக்கு ஆதரவாக 16 முதல் 20 எம்எல்ஏக்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. முதலில் சூரத் நகரில் தங்கி இருந்த அவர்கள் பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்திக்குச் சென்றனர். ஒவ்வொரு நாளும் ஷிண்டேவுக்கு ஆதரவு தருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. கட்சி தனது முழு கட்டுப்பாட்டில் உள்ளது என நினைத்த தாக்கரேவுக்கு அதிர்ச்சியே பதிலாகக் கிடைத்தது.

கூட்டணிக் கட்சிகள்
இந்த விவகாரம் முதலில் தொடங்கிய போது, கூட்டணிக் கட்சிகளான என்சிபி மற்றும் காங்கிரஸ் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நிலைமையை தாக்கரே சமாளிப்பார் என்றே நினைத்தனர். ஆனால், நிலைமை கையைவிட்டுப் போவதை உணர்ந்த பின்னரே சரத் பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் வெளியேறுவது குறித்து புலனாய்வுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்காதது குறித்து அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பகீர் குற்றச்சாட்டு
இந்தச் சூழலில் என்சிபி தலைவர் சரத் பவாரை பாஜக மிரட்டுகிறது என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "மகா விகாஸ் அரசை அரசைக் காப்பாற்ற முயன்றால், சரத் பவார் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் என மத்திய பாஜக அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார். மகா விகாஸ் அரசு தப்பினாலும் இல்லாவிட்டாலும், சரத் பவாரை நோக்கி இதுபோல பேசுவதை ஏற்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

மோடியின் அமைச்சர்கள்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கேட்டுக்கொள்ளுங்கள்.. உங்கள் தலைவர்கள் சிலர் சரத் பவாரை மிரட்டுகிறார்கள். இது இப்போது சட்டப் போராட்டமாக மட்டுமே உள்ளது. சிவசேனா தொண்டர்கள் இதுவரை சாலைகளில் இறங்கவில்லை. தேவைப்பட்டால், நாங்கள் தெருவில் இறங்கியும் போராட்டம் நடத்துவோம்" என்று அதிரடியாகக் கூறி உள்ளார்

சட்டப் போராட்டம்
உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்கத் தேவையான எம்எல்ஏக்கள் தன்னிடம் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ள நிலையில், அது பற்றிப் பேசிய சஞ்சய் ராவத், "இதில் சில விதிகள் உள்ளன. இதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் உள்ளன. இது இப்போது சட்டப் போராட்டம். ஒரு சிலர் அவருடன் 40 பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் வேறு மாதிரி கூறுகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மும்பைக்கு வந்தால் தான் எல்லாம் தெரியும்.

வெல்வோம்
வரும் நாட்களில் மோதல் என்பது எண்ணிக்கை (எம்எல்ஏக்கள் ஆதரவு), பேப்பர்கள் (சட்டங்கள்), வீதிகளிலும் நடக்கும். இந்த மூன்றிலும் சிவனா நிச்சயம் வெல்லும்.. அதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்" என்றார். நேற்றிரவு ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர சட்டசபையின் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலுக்கு சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதை உறுதி செய்யும் கடிதம் எழுதினார். உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு குறைந்து விட்ட போதிலும், என்சிபி மற்றும் காங்கிரசும் கூட்டணியில் உறுதியாக உள்ளதாகவே தெரிவித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications