மகாராஷ்டிரா: இரு பிரிவினரிடையே வன்முறை-அவுரங்கசீப், திப்புசுல்தான் குறித்த சமூக வலைதள பதிவால் மோதல்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப், திப்புசுல்தான் குறித்த சமூக வலைதளப் பதிவுகளால் மிகப் பெரும் மோதல் வெடித்துள்ளது. மகாராஷ்டிராவில் கோலாப்பூரில் தடையை மீறி சென்ற இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அவுரங்கசீப், திப்புசுல்தானை புகழ்ந்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு மதத்தைச் சேர்ந்த குழுவினர் பதிவிட்டிருந்தனர். அதில் அவுரங்கசீப், திப்புசுல்தானை புகழக் கூடிய வாசகங்களுடனான போஸ்டர்களும் பகிரப்பட்டிருந்தது. அதிலேயே மராத்தா சமூகத் தலைவர்கள், அரசர்களை இகழக் கூடிய வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

அவுரங்கசீப், திப்புசுல்தான் உள்ளிட்டோரை புகழ்ந்தும் மராத்தா தலைவர்களை இழிவுபடுத்தியும் ஒருதரப்பினர் திடீரென செயல்படுவதைக் கண்டித்து இந்துத்துவா அமைப்பினர் இன்று கோலாப்பூரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் கோலாப்பூர் சிவாஜி பூங்கா அருகே ஆயிரக்கணக்கானோர் திடீரென ஒன்று திரண்டு வாட்ஸ் அப் குழுவினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் கூட்டத்தின் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனையடுத்து போலீசாருக்கும் இந்துத்துவா அமைப்பினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.
மேலும் கோலாப்பூர் நகரில் பல இடங்களில் தனியார் சொத்துகள் குறிவைத்து தாக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. இதனால் கோலாப்பூரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாந்த் ஷிண்டே கூறுகையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். யார் தவறு செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், அவுரங்கசீப்பை ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் புகழ்வதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்? சகிக்க முடியாது. மகாராஷ்டிராவில் ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் அவுரங்கசீப்பை புகழ்கின்றன சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவை திடீரென நிகழவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோலாப்பூரில் பல இடங்களில் போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications