சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கு: போலீஸ் மிரட்டல்.. நீதிமன்றத்தில் முக்கிய சாட்சி பரபரப்பு மனு
மும்பை : சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் சாட்சியங்களை மறு விசாரணை செய்ய கோரி மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, சொராபுதீன் ஷேக், அவரது மனைவு கவுசர்பி ஆகியோரும், அடுத்த ஆண்டு உதவியாளர் துளசி பிரஜாபதியும், குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீசாரால், சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த 3 கொலைகளும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தின. இவை போலி என்கவுண்டர்கள் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
3 கொலைகளிலும், குஜராத் மாநில அரசின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக, அப்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அமித்ஷா 2010ல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில், சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிம் பிரஜாபதியின் கூட்டாளியான ஆசம் கான், சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியங்களை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார். அதில், சாட்சியம் முழுமையடையாததோடு, தனக்கு பாதுகாப்பு இல்லையென கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மானின் அச்சுறுத்தல் காரணமாக அரசியல்வாதிகள், அதிகாரிகளின பெயர்களை வெளியிட அச்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விசாரணை என 20 நாட்களாக சித்திரவதையை மட்டும் அனுபவித்ததாகவும் ஆசம் கான் தெரிவித்துள்ளார்.

குடும்பத்திற்கு அச்சுறுத்தல்
கடந்த சில மாதங்களாக தனது குடும்பத்தினருக்கு "அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன" என்று முக்கிய சாட்சியான கான் தெரிவித்துள்ளார். அதே நேரம், ராஜஸ்தானில் வழக்குகள் ஏராளமாக பதியபட்டு தான் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியம் அழிப்பு
என்கவுண்டர் வழக்கில் சுமார் 500 பேர் பட்டியலிடப்பட்ட சாட்சிகளாக இருந்தபோதிலும், 210 பேர் மட்டுமே சி.பி.ஐ. மூலம் விசாரிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டம் 164 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பின்பு, ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். சொராபுதீன் ஷேக் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

சந்தேகம் கிளம்பியது
முன்னதாக, சொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் சில அரசியல் தலைவர்களுக்கு தொடர்பிருந்ததாக புகார் கூறப்பட்டது. அதே சமயம், வழக்கை விசாரி்த்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications