பரபரப்பை ஏற்படுத்திய சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் நாளை தீர்ப்பு!
மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
குஜராத்தை சேர்ந்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் 2005ஆம் ஆண்டும், கூட்டாளி துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இவை போலி என்கவுண்டர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, குஜராத் சிஐடி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை 2010ஆம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது. 210 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
இரு வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற இறுதி வாதத்தில், பிறழ் சாட்சியங்களையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. நடைபெற்றது போலியான என்கவுண்டர் தான் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளை இந்த தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற போது குஜராத் உள்துறை அமைச்சராக பதவி வகித்த அமித்ஷா, இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications