ஜியோ-க்கு சவால் விடுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.. ஐபிஎல் 2023 தொடங்கும் முன்பே சுவாரஸ்யம்.. வெல்வது யார்?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணிகளுக்கு இடையே கடும் சண்டைகள் இருக்கும் என்று பார்த்தால் நேரடி ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இடையிலேயே சுவாரஸ்ய சண்டைகள் உருவாகியுள்ளன.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. லீக் போட்டிகளுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதன்படி முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர்
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு தான் இருவேறு ஒளிபரப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பிற்கான உரிமையை வியாகாம் 18-ன் ஜியோ சினிமா நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இதனால் எப்படி இரு அணிகளும் தங்களது ஒளிபரப்பில் சுவாரஸ்யத்தை காட்டவுள்ளது என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஸ்டார் நிறுவனம் அதிரடி
இந்நிலையில் வியாகாம் நிறுவனத்திற்கு நேரடியாக சவால் கொடுக்கும் வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நேரலைக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதே வர்ணனையாளர்கள் தான். அந்தவகையில் ஐபிஎல் தொடருக்கான தனது கமண்ட்டேட்டர்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது.

பட்டியல்?
இந்த முறை ஸ்டார் நிறுவனத்திற்காக ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி போன்ற நட்சத்திர வர்ணனையாளர்கள் இடம் பெறவில்லை. மாறாக சுனில் கவாஸ்கர், டாம் மூடி, ஜாக் காலீஸ் உள்ளிட்ட பல முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்றாக களமிறங்குகின்றனர். தமிழ் மொழியை பொறுத்தவரையில் வழக்கம் போல ஆர்.ஜே.பாலாஜி, யோமகேஷ், முத்து, சத்யநாராயணன் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

வியாகாமிற்கு சிக்கல்
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வர்ணனையாளர்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இன்னும் சிலர் நேரடியாக களத்தில் இருந்து தொகுத்து வழங்குவார்கள். இதனால் வியாகாம் நிறுவனம் தனது டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு எதுபோன்ற வர்ணனையாளர்களை நியமிக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பு இருக்கும் என்பதால் சற்று சவாலான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications