சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிக்கிய.. நடிகை ரியா சக்கரவர்த்தி வங்கி கணக்கு முடக்கம் ரத்து
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு போதை மருந்து சப்ளை செய்த குற்றச்சாட்டின்பேரில், முடக்கப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியின் வங்கிக் கணக்குகளை ரிலீஸ் செய்ய போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 மாதங்களுக்குப் பிறகு அவரது வங்கி கணக்கு முடக்கம் ரத்தாகியுள்ளது. மேலும் அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போனை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தனது வங்கிக் கணக்குகள் மற்றும் மின்னணு சாதனங்களை வழங்க கோரி, ரியா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மடிக்கணினி மற்றும் மொபைல் ஃபோனைத் திரும்ப ஒப்படைக்க பிணையாக 1 லட்சம் பாண்ட் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் இன்று தனது உத்தரவிட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
விசாரணை முடியும் வரை செல்போன் மற்றும் லேப்டாப்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டும், விற்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் 2020ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி 34 வயதான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ரியா சக்கரவர்த்தி
சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை மருந்து பயன்படுத்தியதாகவும், அவருக்கு போதைப்பொருள் ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஏஜென்சியால் (என்சிபி) 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரரும் அடங்குவர். சில நாட்களுக்குப் பிறகு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

வங்கி கணக்குகள்
இந்த நிலையில்தான், வங்கி கணக்குகளை விடுவிக்க ரியா கோரினார். அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிகில் மனேஷிண்டே, இந்த விவகாரம் முடிவுக்கு வர கால அவகாசம் எடுக்கும் என்பதால், வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டார். போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சி சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அதுல் சர்பாண்டே, இந்த வழக்கில் நிதி விசாரணை நடந்து வருவதாகவும், கணக்குகள் விடுவிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

திடீர் திருப்பங்கள்
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தார் என்றுதான் விசாரணை தொடங்கியது. ஆனால் பிறகு பல திருப்பங்களை பார்த்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கேகே சிங், ரியா சக்கரவர்த்தி தனது மகனை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அவருக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, சிபிஐ இந்த வழக்கை எடுத்துக் கொண்டது.

ரியா கைது
ரியா கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தார். அவரது சகோதரர் ஷோக், மூன்று மாதங்கள் சிறையிலிருந்தார். பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். ரியா மற்றும் ஷோக் ஆகிய இருவரும் போதைப்பொருட்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காக வாங்கவில்லை, மாறாக சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு சப்ளை செய்வதற்காக போதைப்பொருட்களை வாங்கியதாக போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சி திரும்பத் திரும்ப கூறியது. இந்த நிலையில்தான், ரியா வங்கி கணக்கு முடக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications