"நாட்டின் மிக பெரிய ஊழல் கட்சி!" தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த பாஜக! முதல்வர் தாக்கு
மும்பை: மும்பையில் நடக்கும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ராகுல் காந்தி கடந்தாண்டு எப்படி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்தினாரோ.. அதேபோல இப்போது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்தி வருகிறார்.

மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாகப் பயணித்து சமீபத்தில் மகாராஷ்டிரா வந்தடைந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தின் நிறைவு விழா இப்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த நிறைவு விழா கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்டாலின்: இந்த இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும் என்ற முதல்வர் ஸ்டாலின், இந்தியா ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்திக்கு வாழ்த்துகள் என்றும் மக்களவையில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வென்றவர் ராகுல் காந்தி என்றும் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பாஜகவை வீழ்த்துவது மட்டுமே.. தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியைக் கிழித்துவிட்டது.. உண்மையான ஊழல் கட்சி பாஜக தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது.. மற்ற கட்சிகளை ஊழல் கட்சிகள் என விமர்சித்துள்ள பாஜக தான் உண்மையான ஊழல் கட்சி.
தேர்தல் பத்திரங்கள்: அமலாக்கத் துறை சோதனைக்கு ஆளான சில நாட்களில் பல நிறுவனங்கள் பாஜகவுக்குத் தாராளமாக நன்கொடை கொடுத்துள்ளன. இதன் மூலம் பாஜக நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்த ஊழல் கட்சி என்பது தெரிய வந்துள்ளது. இந்தி திணிப்பின் போது இரு மொழி கொள்கையில் உறுதியாக இருந்தது போல சிஏஏவை உறுதியாக அமல்படுத்த மாட்டோம்..
திமுக குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து தவறான தகவல்களைச் செய்து வருகிறார். பாஜக அரசு தமிழக மக்களுக்குச் செய்த நல்லது என்ன என்பதைச் சொல்ல முடியுமா. மக்களைப் பிரிக்கும் பாஜகவை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி முறியடிக்கும்.
இந்தியா கூட்டணியைக் கண்டே இப்போது பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார். இதன் காரணமாக இந்தியா என்ற பெயரக் கூட இப்போது அவர் பயன்படுத்த மறுக்கிறார். அச்சத்தால் பிரதமர் மோடி தொடர்ந்து இந்த கூட்டணி தொடர்பாக அவதூறுகளைப் பரப்பி வருகிறார்" என்று அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பாஜகவை இப்படி கடுமையாக விமர்சித்துப் பேசுவதை அங்கே அமர்ந்து இருந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
மேலும், பாஜகவை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் போது அங்கே திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். குறிப்பாக பாஜக ஆட்சியைத் தோற்கடிப்போம் என அவர் சொன்ன போது கூட்டம் விண்ணை பிளந்தது.












Click it and Unblock the Notifications