ஒரு வினாடிக்கு ஒரு கால்! பெண் ஊழியருக்கு 'டெக்னிக்கல்' டார்ச்சர்.. நாசிக் விவகாரத்தில் அடுத்த பூதம்
மும்பை: டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் கிளையில், பாலியல் தொல்லை மற்றும் மத மாற்றப் புகார் பெரிதாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்ததாகப் புகார் எழுந்த மேலதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகாரளித்த பெண்ணையே 'சைலண்ட்' ஆக இருக்கச் சொன்ன ஹெச்.ஆர் மேலாளர் மேனேஜரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) நிறுவனத்திற்கு நாடு முழுக்க பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. பல லட்சம் இளைஞர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். இதற்கிடையே அங்கு நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பாலியல் தொல்லை மற்றும் மத மாற்றப் புகார் எழுந்துள்ளது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் பெரிதாக வெடித்து வருகிறது.

என்ன நடந்தது!
நாசிக் டிசிஎஸ் கிளையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்த ஒரு பெண், தனது டீம் லீடர் ரசா மேமன் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார். தனியாக இருக்கும்போது நெருங்க முயன்றது, தவறான நோக்கத்தில் தொட்டது மற்றும் பின்தொடர்ந்தது என அந்தப் பெண் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
வேண்டாத விளம்பரம்
அதாவது பாதிக்கப்பட்ட பெண் முதலில் மேலாளர்களிடம் முறையிட்டுள்ளார். முதலில் பயிற்சி மேலாளர், "அவன் குணம் ஏற்கனவே சரியில்லை. நீதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தனியாக இருக்காதே" என அந்தப் பெண்ணையே பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி இருக்கிறார். அடுத்து ஹெச்.ஆர் மேலாளர் அஸ்வினி சைனானி இதை விட அலட்சியமாகப் பேசியிருக்கிறார்.. "உனக்கு ஏன் இந்த வேண்டாத விளம்பரம்? இந்தப் புகாரை இத்துடன் விட்டுவிடு" என சமரசம் செய்ய முயன்றுள்ளார்.
அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், இவை எல்லாமே போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அஸ்வினி சைனானி உட்பட இதுவரை 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டார்ச்சர்
புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ரசா மேமன், அந்தப் பெண்ணைப் பற்றி அவதூறு பரப்பி இருக்கிறார். மேலும், வேலையிலும் டார்ச்சர் செய்துள்ளார். சக ஊழியர்களுடன் இணைந்து, அந்தப் பெண்ணுக்கு வரும் அழைப்புகளின் வேகத்தை அதிகரித்துள்ளனர். 30 வினாடிகளுக்கு ஒருமுறை வரவேண்டிய அழைப்புகளை, வினாடிக்கு ஒன்றாக மாற்றி, அந்தப் பெண்ணை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் டிசிஎஸ் நிறுவனம் டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் அந்த நிறுவனம், "பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் எங்களுக்கு ஜீரோ டாலரன்ஸ் பாலிசி உள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து எங்களுக்குப் புகார்கள் எதுவும் முறையான சேனல்கள் மூலம் வரவில்லை" எனத் தெரிவித்துள்ளது.
தீவிர விசாரணை
அதேநேரம் ரசா மேமனின் குடும்பத்தினர் இந்த புகார்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது அலுவலகப் போட்டி காரணமாகச் சுமத்தப்பட்ட பொய் புகார் எனக் கூறி வருகின்றனர். மறுபுறம் நாசிக் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு, இந்த விவகாரத்தில் மொத்தம் 9 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசாரணையில் மேலும் பல பகீர் தகவல்கள் தெரிய வரலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications