என்ன ராமலிங்கம் எப்படி இருக்க? கொரோனா பரோல் முடிந்து சிறை திரும்பாத கைதிகள்! சாட்டையை சுற்றிய போலீஸ்
மும்பை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறையிலிருந்து தற்காலிகமாக பரோல் வழங்கி வெளியேற்றப்பட்ட சிறைக் கைதிகள் மீண்டும் சிறை திரும்புமாறு மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டபோதும் சுமார் 451 பேர் இன்னும் சிறைக்கு திரும்பவில்லையென்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தற்போது இவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.
கொரோனா தொற்று 2019ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கியது. இது 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தீவிரமானது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் இந்த தொற்று பாதிப்பு பரவியது. இது பரவாத இடமே இல்லையென்று சொல்லலாம். அந்த அளவுக்கு தீவிரமாக பரவியது. இவ்வாறு இக்கும் நிலையில், சிறைகளிலும் தொற்று பாதிப்பு தீவிரமடைந்தது. எனவே இதனை தடுக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் சுமார் 35,00 பேர் இருக்கின்றனர். இவ்வளவு கூட்டம் இருந்தால் நிச்சயம் தொற்று பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி இதிலிருந்து சுமார் 14,780 கைதிகளுக்கு தற்காலிக பரோல் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இவர்கள் சிறு சிறு குற்றங்களில் கைதாகி 7 ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றவர்களாவார்கள். அதேபோல விசாரணை கைதிகளுக்கும் பரோல் வழங்கப்பட்டது.

பரோல்
இவ்வாறு விடுவிக்கப்பட்டதில் பல கைதிகள் சொந்த ஜாமீன் பெற்று தற்போது வெளியில் இருக்கின்றனர். ஆனால் சிலர் ஜாமீன் பெறாமல் வெளியில் இருக்கின்றனர். தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறைந்த நிலையில் இந்த கைதிகளை மீண்டும் சிறைக்கு வரவழைக்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கைதிகளின் முகவரிக்கு சென்று தகவல் தெரிவித்தனர். ஆனால் இப்படி தகவல் கொடுத்த பின்னரும் சுமார் 451 பேர் சிறைக்கு தற்போது வரை திரும்பவில்லை.

வழக்குப்பதிவு
இவர்களுக்கு இரண்டு முறை தகவல் தெரிவித்தபோதும் சிறைக்கு திரும்பாததால் இவர்கள் அனைவர் மீதும் ஐபிசி பிரிவு 224 கீழ் 357 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டிஜிபி (சிறை) அமிதாப் குப்தா கூறுகையில், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திடம் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த அதிகாரிகளுக்கு குற்றவாளிகள் புழங்கும் இடம் தெரியும். எனவே இவர்கள் உதவியுடன் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.

முகவரி
இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், "காணாமல் போன கைதிகள் தங்கள் முகவரியை மாற்றிக்கொண்டுள்ளனர். மேலும், வீட்டில் இல்லாமல் தொலை தூரத்தில் வசிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. எப்படி இருப்பினும் அவர்களை நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் கொஞ்சம் நாட்கள் எடுக்கலாம். பரோல் வழங்கப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வந்து கையெழுதிட வேண்டும் என்பதுதான் உத்தரவு. இந்த பரோலை பயன்படுத்தி பலர் சொந்த ஜாமீனில் தற்போது வெளியே இருக்கிறார்கள்.

வாய்ப்பு
இதேபோல இந்த 451 பேருக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மட்டுமல்லாது இப்போது வெளியில் இருப்பவர்கள் சிறு சிறு குற்றங்களில் உள்ளே சென்றவர்கள்தான் எனவே இவர்களை எளிதில் பிடித்துவிடலாம்" என்று கூறியுள்ளார். பாலியல் பலாத்காரம், கொலை, கொலை முயற்சி, போக்சோ போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பரோல் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications