புகழ் பெற்ற கவிஞர் வீட்டில் திருடிவிட்டேனே.. பொருட்களை போட்டுவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன்
மும்பை: மகாராஷ்டிராவில் பிரபல கவிஞர் வீட்டில் பொருட்களை திருடியதற்காக வருத்தப்பட்ட திருடன், மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு, பொருட்களை திரும்ப கொண்டு வந்து வீட்டில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நூதன சம்பவம் பற்றி பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் வீடு இருக்கிறது. சமீபத்தில் திருடர் ஒருவர் இவரது வீட்டை திருடுவதற்காக நோட்டமிட்டு வந்தார். திருடன் எதிர்பார்த்தது போலவே வீடு சில நாட்களாக பூட்டிக் கிடந்தது. நைசாக பூட்டை உடைத்த திருடன், உள்ளே புகுந்து ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார்.

மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்துள்ளார். அப்போது பிரபல கவிஞரான நாராயண் சுர்வேவின் வீடு என்பதை திருடன் கண்டுபிடித்துள்ளார். வீட்டில் கவிஞர் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன், இவர் வீட்டில் போய் திருடிவிட்டோமே என்று கவலை அடைந்தார்.
கவிஞர் நாராயண் சுர்வே மகாராஷ்டிராவில் பலருக்கும் தெரிந்த எழுத்தாளர். மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்த நாராயண் சுர்வே, வீட்டுவேலை, ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை, குழந்தை காப்பாளர், நாய் பராமரிப்பு, பால் டெலிவிரி செய்வது, சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து பின்னாட்களில் பிரபல எழுத்தாளராக மாறி, கடைசியில் கவிஞராக மாறியவர். அவரது கவிதைகள் நகர்ப்புற ஏழை தொழிலாளர்களுக்கு உயிர்நாடியாக உள்ளது.
இதை அறிந்த திருடனுக்கு கவிஞர் நாராயண் சுர்வேவை வீட்டில் திருடி விட்டோமே.. என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கவிஞரின் வீட்டில் திருடிய டிவி உள்ளிட்ட பொருட்களை அந்த திருடர் மூட்டை கட்டி மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்துள்ளார். மேலும் வீட்டில் ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிசென்றுள்ளார். அதில், "மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.
கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் காலமானார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் திருடன் எழுதி வைத்து சென்ற மன்னிப்பு கடிதத்தை பார்த்தனர். திருடனின் செயலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.
எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி திருடனை தேடி வருகிறார்கள்.
திருடன் ஒருவர் கவிஞரின் வீட்டில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications