26/11.. மறக்க முடியுமா.. சோக நினைவுகளை.. அதிரடி ஆபரேஷனை.. மும்பை தாக்குதல் நினைவு தினம் இன்று!
மும்பை: நாட்டின் வர்த்தக தலைநகரமான மும்பையை குறி வைத்து தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய 12-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் மொத்தம் 160-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்தவர்களை மீட்ட நமது ராணுவ வீரர்கள் ஏராளமானோர் உயிர் தியாகம் செய்தனர். உலகின் பல்வேறு நாடுகள் தீவிரவாத தாக்குதலை சந்தித்து இருந்தாலும் 2008 நவம்பரில் இந்தியா சந்தித்த தாக்குதல் கேட்பவர் அனைவரின் கண்களையும் குளமாக்கி விடும்.

நுழைந்தது எப்படி
ஆம்... கடந்த 2008 நவம்பர் மாதம் 26ம் தேதி லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இந்திய வரலாற்றில் மிக மோசமான சுவடுகளை ஏற்படுத்தி விட்டனர். அந்த அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகள் திட்டமிட்டபடி கடல் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தனர். முதலில் படகில் மீன் பிடித்த உள்ளூர் மீனவர்களை கொன்று அந்த படகில் மும்பைக்கு நுழைந்தனர்.

முதல் டார்கெட்
பின்னர் 2 குழுக்களாக பிரிந்து தங்களது தாக்குதல் திட்டத்தை அரங்கேற்றினர். அன்று மாலை மும்பை சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இவர்கள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விஐபிக்கள் வசிக்கும் பகுதி
இந்த ஆபரேஷனுக்கு அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி வழிநடத்தினார். இந்த தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் விஐபிக்கள், வெளிநாட்டினர் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கபேவிலும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 25 பேர் வரை உயிரிழந்தனர். வெளிநாட்டை சேர்ந்த பலரும் பலியானோர்களில் அடங்குவர்.

வெளிநாட்டவர் சிறைபிடிப்பு
பின்னர் தீவிரவாதிகள் வெளிநாட்டினர் வசிக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் கைவரிசையை காட்ட ஆரம்பித்தனர். தாஜ் ஹோட்டல் , ஓரியண்ட் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தினார்கள். இவர்களை பிடிக்க சென்ற தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி ஹேமன்த் கார்கரே உள்ளிட்ட முக்கிய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தாஜ் ஹோட்டலிலும், ஓரியண்ட் ஹோட்டலிலும் வெளிநாட்டவர் உள்பட ஏராளமான பிணைக்கைதிகளை தீவிரவாதிகள் பிடித்து வைத்தனர்.

தீவிரவாதிகள் பணிந்தனர்
உள்ளே இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவத்தினருக்கு மூன்று நாள்கள் தேவைப்பட்டது. ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. ஒரு வழியாக மூன்று நாட்களுக்கு பிறகு தீவிரவாதிகள் பணிந்தனர். நவம்பர் 29ம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது.

தூக்கில் போடப்பட்டார்
பிணைக்கைதிகளாக இருந்த 400-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். தீவிரவாதி அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டார் .மற்ற தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்டார்.












Click it and Unblock the Notifications