நான் ஜெயலலிதாவின் அண்ணன் மகன்! பாலிவுட் நடிகையிடம் பீலா விட்ட சுகேஷ் சந்திரசேகர்.. அதுவும் திகாரில்!
தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என பாலிவுட் டிவி நடிகை சாஹத் கன்னாவிடம் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்ததாக நடிகை பேட்டியில் தெரிவித்துள்ளார்
மும்பை: தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும் ஒரு பிரபல தென்னிந்திய டிவி சேனலின் உரிமையாளர் என்றும் டிவி நடிகை சஹாத் கன்னாவிடம் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்ததாக நடிகை பேட்டி அளித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சுகேஷ் சந்திரசேகர் என்ற பெயரை நாம் புதிதாக அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். அன்று முதல் சுமார் 5 ஆண்டுகளாக சுகேஷ் என்ற பெயரையும் அவர் செய்த முறைகேடுகள் குறித்தும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகேஷ் சந்திரசேகர், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கிய நிலையில் அதை தனக்கு தெரிந்த தேர்தல் அதிகாரிகளிடம் சொல்லி மீட்டுத் தருவதாகவும் அதற்கு ரூ 100 கோடி தேவை என்றும் டிடிவி தினகரனிடம் பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் திகார் சிறையில் இருந்து வருகிறார் சுகேஷ்.

சிறையில் இருந்து கொண்டு மோசடி
இந்த நிலையில் சிறையில் இருந்தவாறே மருந்து தயாரிப்பு நிறுவன தொழிலதிபரின் மனைவியிடம் ரூ 200 கோடி பணத்தை பெற்றதாக அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னான்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

ஜாக்குலின்
ரூ 200 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஜாக்குலினுக்கும் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தனக்கு சுகேஷ் யாரென்றே தெரியாது என ஜாக்குலின் கூறியிருந்த நிலையில் அவரும் சுகேஷும் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜாக்குலினை தனது வலையில் விழவைக்க ரூ 200 கோடி பணத்திலிருந்து ரூ 10 கோடிக்கு மேல் சுகேஷ் செலவு செய்துள்ளாராம்.

பரிசு பொருட்கள்
சிறையில் இருந்தாலும் தனக்கு பிடித்த நடிகைகளுக்கு பரிசுப் பொருட்களையும் பணத்தையும் வாரி வழங்கியுள்ளார் சுகேஷ். இதில் சுகேஷின் மோசடி பணத்தை அதிகமாக ருசி கண்டவர் ஜாக்குலின்தானாம். இந்த வழக்கு தற்போது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை சாஹத் கன்னா ஒரு ஆங்கில ஊடகத்திற்கு சுகேஷ் குறித்து பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.

சாஹத் கன்னா
இதுகுறித்து சாஹத் கன்னா தனது பேட்டியில் கூறுகையில், நான் டெல்லி திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டேன். ஏதோ என்னை சிக்க வைக்கிறார்கள் என எனக்கு தெரிந்தவுடன் நான் அச்சமடைய தொடங்கினேன். மேலும் மும்பையில் எனது பெற்றோர் பராமரிப்பில் உள்ள எனது இரு குழந்தைகளை நினைத்து கொண்டேன். நாங்கள் காரில் இருந்து இறங்கியவுடன் ஒரு அறைக்கு அழைத்து செல்லப்பட்டேன். அந்த அறையில் பல்வேறு லேப்டாப்கள், வாட்ச்கள், அதிக விலைமதிப்புள்ள பொருட்கள் இருந்தன.

கழுத்தில் தங்க சங்கிலி
அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவர் தங்க சங்கிலியை கழுத்தில் அணிந்திருந்தார். ஒரு பேன்சி டிசர்ட்டை அணிந்திருந்தார். தான் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும் தனக்கு சொந்தமாக பிரபல தென்னிந்திய டிவி சேனல் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே அந்த நபர் மண்டியிட்டபடி அமர்ந்து என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.

ஆத்திரத்தில் கூச்சலிட்டேன்
இதனால் ஆத்திரமடைந்த நான் கோபத்தில் அவரிடம் கூச்சல் போட்டேன். எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் என்றனர். அதற்கு அந்த நபர், "உனது கணவர் சரியான நபரில்லையே. அதனால் உனது குழந்தைகளுக்கு நான் தகப்பனாக இருந்து பார்த்துக் கொள்கிறேன்" என்றார். உடனே எனக்கு மேலும் கோபம் ஏற்பட்டு அழுதேன். சிறையிலிருந்த அவர் எனக்கு ரூ 2 லட்சம் கொடுத்தனுப்பினார். இதைத் தொடர்ந்து எனக்கு அந்த நபரின் குழுவினரிடம் இருந்து மிரட்டல் கால்கள் வந்தன. அதில் ரூ 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் திகார் சிறையில் சுகேஷை வந்து பார்த்துவிட்டு சென்றதை டிவி சேனல்களுக்கு கொடுத்துவிடுவோம் என மிரட்டினர். இதன் பின்னர் நானும் ரூ 10 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டேன். பிறகு அவர் ரூ 200 கோடி மோசடி செய்ததை ஊடகங்களில் பார்த்த பிறகுதான் நான் சந்தித்த நபர் சுகேஷ் என தெரியவந்தது. இவ்வாறு சாஹத் கன்னா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications