எங்கிட்டு போனாலும் கேட்... திரெளபதி முர்முவை ஆதரிக்கும் சிவசேனாவுடனான கூட்டணியை முறிக்கும் காங்.?
மும்பை : தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்துள்ளதால் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றுள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

பின்னர் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்க உத்தவ் தாக்கரே தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்து. இந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண் வேட்பாளரான திரவுபதி முர்முவை ஆதரிக்க உத்தவ் தாக்கரே நேற்று ஒப்புக்கொண்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, மகாராஷ்டிராவில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் நிலைப்பாடு குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் விமர்சித்துள்ளார். மகா விகாஸ் அகாடியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் இந்த திடீர் நடவடிக்கை குறித்து கேள்விகளை அவர் எழுப்பினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், குடியரசுத் தேர்தல் ஒரு கருத்தியல் போர் என்றும், இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தொடர் போராட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ஆண்களுக்கு எதிரான பெண்கள் அல்லது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள் பற்றிய கேள்வி அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கு ஆதரவான அனைவரும், எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
திரௌபதி முர்முவுக்கு சிவசேனா ஏன் ஆதரவளிக்கிறது என்பதற்கு அக்கட்சி சில காரணங்களைச் சொன்னதாகவும், ஆனால் அக்கட்சியின் தலைமையின் உண்மையான பங்கு பற்றி தங்களால் எதுவும் சொல்ல முடியாது எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா ஒரு தனித்த அரசியல் கட்சி என்றும், எனவே அவர்கள் சுதந்திரமாக தங்கள் முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜனநாயகத்திற்கு எதிராக மாநில அரசை வீழ்த்தி, சிவசேனாவின் இருப்புக்குச் சவாலாக பாஜக இருக்கும்போது, சிவசேனாவின் இந்த திடீர் நடவடிக்கை குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் பாலாசாகேப் தோரட் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவசேனா கட்சி, மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சியின் ஒரு அங்கமாகும் என்று,ஆனால் அவர்கள் முடிவெடுக்கும் போது எங்களுடன் எதையும் விவாதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சியின் மற்றொரு கட்சின தேசிய வாத காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை சிவசேனா ஆதரித்தாலும், மாநிலத்தில் தங்கள் கூட்டணி தொடர்ந்து பயணிக்கும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ஒவ்வொரு குடியரசுத் தலைவர் தேர்தலிலும், சிவசேனா கட்சி தனி முடிவை எடுத்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்றும், முர்மு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக சேனா ஆதரவு அளித்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென ஆதரவு அளித்திருப்பது, மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகளிடயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications