ரஷ்யாவுக்கு விழுந்த அடி.. அமெரிக்காவின் ஆக்ஷனால் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்திய நிறுவனங்கள்?
மும்பை: ரஷ்யா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஷ்யா எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்து அமெரிக்கா மிகப் பெரிய ஒரு பொருளாதாரத் தடையை விதித்தது. இது இந்திய நிறுவனங்களையும் கூட பாதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகள் சர்வதேச அளவில் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள்:
கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட மேஜர் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் 185 கப்பல்கள் ஆகியோர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. இது சமீப காலங்களில் விதிக்கப்பட்டதில் மிகப் பெரிய பொருளாதாரத் தடையாகப் பார்க்கப்படுகிறது. இந்த பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவால் தனது கச்சா எண்ணெய்யை உலகின் மற்ற பகுதிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியாது. இது இந்தியா மற்றும் சீனாவுடனான ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்.
மேலும், இந்த பொருளாதாரத் தடையால் ரஷ்யாவை விட்டுவிட்டு, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அதிகம் கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூட சிக்கல் வரலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். இது தொடர்பாக டோலட் கேபிடல் துணைத் தலைவர் யோகேஷ் பாட்டீல் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
எது பாதிக்கப்படும்:
அதாவது இந்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவுடனான இந்திய நிறுவனங்களின் நீண்ட கால ஒப்பந்தங்களைப் பாதிக்காது என்று யோகேஷ் பாட்டீல் தெரிவித்தார். அதேநேரம் மார்க்கெட் விலையில் கொள்முதல் செய்யப்படும் ஸ்பாட் கொள்முதல் இதனால் பாதிக்கப்படலாம். இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் சுமார் 40-45 ஸ்பாட் கொள்முதல் மூலமே வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக யோகேஷ் பாட்டீல் மேலும் கூறுகையில், "பல எண்ணெய் நிறுவனங்கள், கப்பல்கள் மீது பைடன் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது இந்திய எண்ணெய் நிறுவனங்களைப் பாதிக்குமா என்பதே பலரது கேள்வி. பொதுவாகக் கச்சா எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்கள் இரண்டு வகையில் இருக்கும். ஏற்கனவே சில நிறுவனங்கள் நீண்ட கால ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. அவை இதனால் பாதிக்கப்படாது.
வேறு என்ன ஆப்ஷன் இருக்கு:
அதேநேரம் ஸ்பாட் கொள்முதல் இதனால் நிச்சயம் பாதிக்கப்படும். இந்தியாவின் ஒட்டுமொத்த கொள்முதலில் இது 40-45% வரும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இப்போது நமது எண்ணெய் நிறுவனங்களுக்கு ரஷ்யா, பேரலுக்கு 3 டாலர் தள்ளுபடி வழங்குகிறது. இப்போது அது தடைப்படுவதால் தேவையைப் பூர்த்தி செய்ய இனிமேல் தள்ளுபடி இல்லாமல் மார்க்கெட் விலையில் மத்திய கிழக்கில் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும்.
இந்திய நிறுவனங்கள்:
நமது ஓஎன்ஜிசி நிறுவனம் ரஷ்யாவில் உள்ள எண்ணெய் வயல்களில் முதலீடு செய்துள்ளன. ஓஎன்ஜிசி நிறுவனத்திற்குச் சொந்தமாக ரஷ்யாவில் மூன்று எண்ணெய் வயல்கள் உள்ளன. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 10-11% வரை இதனால் பாதிக்கப்படலாம் குறிப்பாக சகலின் உள்ள எண்ணெய் வயல் முழுக்க முழுக்க ஏற்றுமதி தொடர்பானது. எனவே, அது பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல ஆயில் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான சில சொத்துகளும் ரஷ்யாவில் உள்ளது. ரஷ்யாவின் உள்நாட்டு உற்பத்திக்காக இயங்கும் எண்ணெய் வயல்களுக்குப் பாதிப்பு வராது. அதேநேரம் அவை ஏற்றுமதி சார்ந்து இருக்கும் எண்ணெய் வளங்களாக இருந்தால் அமெரிக்காவின் தடையால் சற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications