'வெஜிடேரியன்ஸ் மட்டும் தான்’ ஐஐடி பாம்பே கேண்டீனில் நோட்டீஸ்.. வெடித்த சர்ச்சை.. கைவிரித்த நிர்வாகம்
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள ஐஐடி பாம்பே கேண்டீனில் வெஜிடேரியன்கள் மட்டுமே இங்கு உட்கார அனுமதி உண்டு என நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐஐடி பாம்பே உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையின் பவாய் என்ற இடத்தில் இந்தக் கல்வி நிறுவனம் உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு உயர்படிப்புகளை படித்து வருகின்றனர். ஐஐடி வளாகத்திற்கு உள்ளாகவே மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. மாணவர்களுக்கான கேண்டீன்களும் அருகிலெயே உள்ளன.

இந்த நிலையில், கடந்த வாரம் கேண்டீனில் உள்ள சுவர்களில் சில இடங்களில் "வெஜிடேரியன்கள் மட்டுமே இங்கு உட்கார அனுமதி உண்டு" என நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. ஐஐடி கேண்டீனில் திடீரென்று ஒட்டப்பட்டு இருந்த இந்த நோட்டீஸ்கள் மாணவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நோட்டீஸ் ஒட்டபட்டது தொடபான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவின.
நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான ஐஐடி பாம்பேவில் மாணவர்களுக்கு இடையே பேதம் காட்டப்படுவதாக கடும் விமர்சனங்கள் சமூக வலைத்தலங்களில் எழுந்தன. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் வெடித்த நிலையில், ஐஐடி பாம்பே அதிகாரிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், அதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால், இத்தகைய போஸ்டர்களை கேண்டீனில் ஒட்டியது யார் என்று எங்களுக்கே தெரியவில்லை.
வெவ்வேறு விதமான உணவுகளை சாப்பிடுவர்களுக்காக தனித்தனியாக இருக்கைகள் எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. எனவே, இதுபோன்ற நோட்டீஸ்களை யார் ஒட்டியது என்றே தெரியவில்லை" என்று கைவிரித்தனர். மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், ஐஐடி பாம்பே கேண்டீனில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். மேலும் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டது கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்தனர்.
உணவு அடிப்படையில் எந்த பிரிவினையும் கல்வி நிறுவனத்தில் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். ஆனாலும் சில தனிப்பட்ட நபர்கள் இத்தகைய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். கேண்டீனில் சில பகுதிகளை இது வெஜிடேரியன்களுக்கு மட்டும் தான் பிற நபர்கள் இருக்கக் கூடாது என்று சில நபர்கள் தாங்களாகவே கூறிக்கொண்டு பிற மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் ஏஏபிஎஸ்.சி மாணவர் சங்க பிரதிநிதிகள் கூறினர்.
கேண்டீனில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து விடுதியின் பொதுச்செயலாளர் தரப்பில் இருந்து மாணவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், விடுதி கேண்டீனில் சைவ உணவுகளை (Jain distribution) வழங்குவதற்கு தனி கவுண்டர் இருப்பதாகவும் ஆனால், தனியாக இடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
சில தனிநபர்கள் குறிப்பிட்ட இடங்களை ஆக்கிரமிப்பதாகவும் இது போன்ற நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சொந்தமானது எனக் கூறி எந்த ஒரு மாணவரையும் வலுக்கட்டாயமாக மற்றொரு மாணவரை வேறு இடத்திற்கு போக வேண்டும் எனக்கூறுவதற்கு அதிகாரம் இல்லை. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications